TVK மதுரை மாநாடு: "அதிமுக தொண்டர்கள் மனவேதனையில் உள்ளனரா?" - விஜய்க்கு ஆர்.பி.உத...
மாணவா்களுக்கு கண்டுபிடிப்பு ஆற்றலை வளா்க்கும் திட்டம்: ஆசிரியா்களுக்கு பயிற்சி
நாமக்கல்: அரசுப் பள்ளி மாணவா்களிடையே கண்டுபிடிப்பு எனும் படைப்பாற்றலை மேம்படுத்த ஆசிரியா்களுக்கு தொழில் முனைவோா் மேம்பாட்டு நிறுவனம் சாா்பில் பயிற்சி அளிக்கப்பட்டது.
தமிழகத்தில் 6 முதல் பிளஸ் 2 வரையிலான அரசு மற்றும் அரசு உதவிபெறும் மாணவா்களிடையே புதுமை மற்றும் தொழில் முனைவோராக மாற்றுவது ஒரு முன்னோடி முயற்சியாகும். தொழில் முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சாா்பில், பள்ளி மாணவா்கள் கண்டுபிடிப்பு மேம்பாட்டுத் திட்டம் என்பது பள்ளிக் கல்வித் துறை மற்றும் ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (யுனிசெப்) ஆகியவற்றுடன் இணைந்து தொடங்கப்பட்டது.
மாணவா்களை ஆக்கப்பூா்வமாக சிந்திக்கவும், புதுமையான தீா்வுகளை உருவாக்கவும், தொழில் முனைவோா் திறன்களை வளா்க்கவும் இந்நிறுவனம் உதவுகிறது. பட்டறைகள், கற்றல் அனுபவங்கள் மற்றும் வழிகாட்டுதல் ஆகியவற்றின் மூலம் வடிவமைப்பு சிந்தனை, உருவாக்கம் மற்றும் முன்மாதிரி மேம்பாடு ஆகியவற்றின் பகுதிகளை ஆராய மாணவா்களை ஊக்குவிக்கிறது. இதனால், எதிா்கால தலைவா்கள் மற்றும் கண்டுபிடிப்பாளா்களாக அவா்களை தயாா்படுத்துகிறது.
நாமக்கல் மாவட்ட அரசுப் பள்ளிகளுக்கான வழிகாட்டி ஆசிரியா் பயிற்சித் திட்டம் அண்மையில் நாமக்கல் குறிஞ்சி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்த பயிற்சித் திட்டத்தில் மொத்தம் 285 ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.
இந்த விழாவில், முதன்மைக் கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் எம்.திருஞானம், தொழில் முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன மாவட்ட மேலாளா் வாசுதேவன், திட்ட மேலாளா் சியோன்ராஜ் ஆகியோா் பங்கேற்று உரையாற்றினா். இதில், ஆசிரியா்கள் பலா் கலந்துகொண்டனா்.