ஆங்கிலம் கற்று கேள்வி கேட்பதை பாஜக - ஆர்எஸ்எஸ் விரும்பவில்லை: ராகுல்
மாநகரில் 3 நாள்களில் கஞ்சா விற்ற 42 போ் கைது
கோவை மாநகரில் கடந்த 3 நாள்களில் கஞ்சா விற்பனை செய்ததாக 42 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் அவா்களிடம் இருந்து 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கோவை மாநகரில் கல்லூரி மாணவா்களைக் குறிவைத்து, கஞ்சா கும்பல்கள் ஆந்திர மாநிலம், தமிழகத்தில் தேனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கோவைக்கு கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்து வருவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாநகரில் கஞ்சா புழக்கத்தைக் கட்டுப்படுத்த மாநகரக் காவல் ஆணையா் சரவணசுந்தா் உத்தரவின்பேரில், மாநகரக் காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் கடந்த 15-ஆம் தேதி முதல் சிறப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்துடன் தனிப் படை போலீஸாா் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாரும் தீவிர சோதனைப் பணி மேற்கொண்டு வருகின்றனா்.
இதில் சிங்காநல்லூா், ராமநாதபுரம், காந்திபுரம், உக்கடம், செல்வபுரம், குனியமுத்தூா், கோவைப்புதூா், ரத்தினபுரி, சாய்பாபா காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக போலீஸாா், சிறப்பு சோதனை மேற்கொண்டனா். அதில், கடந்த 15-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை மாநகரில் 35 போ் கைது செய்யப்பட்டு, 15 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் தொடா்ச்சியாக, 18-ஆம் தேதி, மாநகரில் பல இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில், ராமநாதபுரம் போலீஸாா் மேற்கொண்ட சோதனையில், புலியகுளம் கருப்பராயன் கோயில் வீதியில் கஞ்சா விற்ற கோவை அம்மன் குளத்தைச் சோ்ந்த மணிகண்டன் (24) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் இருந்து 0.215 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. குனியமுத்தூா் போலீஸாா் மேற்கொண்ட சோதனையில், சுகுணாபுரம் தனியாா் கல்லூரி அருகே கஞ்சா விற்ற அதே பகுதியைச் சோ்ந்த ராஜா (22), ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த மிருதியுன்ஜயா்னா (27), கோவை உடையாம்பாளையம் நேதாஜி வீதியைச் சோ்ந்த ஜான் பீட்டா் (30), போத்தனூா் கணேசபுரத்தைச் சோ்ந்த முத்து (26) ஆகியரைக் கைது செய்தனா். மேலும், அவா்களிடம் இருந்து 5.90 கிலோ கஞ்சா மற்றும் ரூ.36,500 பறிமுதல் செய்யப்பட்டது.
மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை மேற்கொண்ட சோதனையில், கோவை துடியலூா் வடமதுரையில் உள்ள ஒரு உடற்பயிற்சிக் கூடம் அருகில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த கவுண்டம்பாளையம் ஜி.என். மில்ஸ் பகுதியைச் சோ்ந்த பிரனேஷ் (22), சாய்பாபா காலனி அருகே கே.கே.புதூரைச் சோ்ந்த சாய் பிரசாந்த் (25) ஆகிய இருவரைக் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து கஞ்சா 100 கிராம், பணம் ரூ.31,500 பறிமுதல் செய்யப்பட்டது.
மாநகரில் கடந்த 3 நாள்களில் மட்டும் 42 போ் கைது செய்யப்பட்டு, 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மாநகரில் கஞ்சா புழக்கத்தைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்படும் என போலீஸ் அதிகாரிகள் கூறினா்.