இன்றைய ராசிபலன் | Indraya Rasi palan | June 30 | Astrology | Bharathi Sridhar | ...
``மாமியார் வீட்டில் மரியாதை இல்லை..'' - மனைவியை கொலை செய்த கணவர் பகீர் வாக்கு மூலம்
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள பாலப்பள்ளம் படுவூர் காட்டுவழி பகுதியைச் சேர்ந்தவர் டார்வின்(46). கூலி தொழிலாளி. இவரது மனைவி பபிதா நித்யசெல்வி(39). இவர்களுக்கு பென்குரூஸ்(9) என்ற மகனும், டிக்ஸ்மென்ரின்(7) என்ற மகளும் உள்ளனர். பென்குரூஸ் கழுவன்திட்டை பகுதியில் உள்ள மனவளர்ச்சி குன்றியோருக்கான பள்ளியில் படித்துவருகிறான்.
டிக்ஸ்மென்ரின் பாட்டி வீட்டில் தங்கியுள்ளார். டார்வினும், அவரது மனைவி பபிதா நித்யசெல்வி ஆகியோர் தங்கள் வீட்டில் இருந்துள்ளனர். நேற்று முன் தினம் பகல் முழுவதும் அவர்களது வீடு திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதியினர் இரவு நேரத்தில் வீட்டை திறந்து பார்த்துள்ளனர்.

அங்கு பபிதா நித்யசெல்வி(39) பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கருங்கல் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். போலீஸார் அங்குசென்று பபிதா நித்யசெல்வியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பபிதா நித்யசெல்வியின் கணவர் டார்வினிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அதில் தனது மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார் டார்வின்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறுகையில், "டார்வினின் மனைவி பபிதா நித்யசெல்வி தனது தாய் வீட்டில் தங்கியிருந்ததுடன், கணவரையும் தனது பெற்றோர் வீட்டில் தங்க வைத்துள்ளார். மாமியார் வீட்டில் தொடர்ந்து தங்கியிருந்ததால் தனக்கு முறையான மரியாதை எதுவும் கிடக்கவில்லை என டார்வின் அடிக்கடி மனைவியிடம் ஆதங்கப்பட்டு வந்தாராம். இது சம்பந்தமாக டார்வினுக்கும் மனைவி பபிதா நித்யசெல்விக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் நடந்து வந்திருக்கிறது.

சம்பவ தினத்தில் அதிகாலையிலேயே கணவன், மனைவி இடையே வாக்குவாதம் நடந்திருக்கிறது. அப்போது ஆத்திரம் அடைந்த டார்வின் துணியால் மனைவியின் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார். மனைவியை கொலை செய்த பின்னர் வெளியே சென்றால் போலீஸ் கைதுசெய்துவிடும் என்ற பயத்தில் மனைவியின் பிணத்துடன் பகல் முழுவதும் இருந்துள்ளார்.
இரவு நேரத்தில் யாருக்கும் தெரியாமல் மனைவி உடலை விட்டுக்கு வெளியே கொண்டுசென்று மறைவான இடத்தில் வீசிவிடலாம் என திட்டமிட்டுள்ளார். இதற்கிடையே இரவு நேரத்தில் அப்பகுதி மக்கள் வீட்டை திறந்ததால் தகவல் வெளியே தெரிந்தது. டார்வினை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறோம்" என்றனர்.