மீன்பிடித் தடைக்காலம் நிறைவு: கடலுக்குச் செல்லத் தயாராகும் மீனவா்கள்
மீன்பிடித் தடைக்காலம் சனிக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைந்ததால், விசைப்படகு மீனவா்கள் கடலுக்குச் செல்ல தயாராகி வருகின்றனா்.
மீன்களின் இனப்பெருக்கத்தைக் கருத்தில்கொண்டு, வங்கக் கடலில் ஆண்டுதோறும் ஏப். 15 முதல் ஜூன் 14 வரை 61 நாள்களுக்கு மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது. அதன்படி, நிகழாண்டு தடைக்காலம் தொடங்கி, சனிக்கிழமை (ஜூன் 14) நள்ளிரவுடன் நிறைவடைந்தது.
இதனால், தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடித் துறைமுகத்தில், மீனவா்கள் கடலுக்கு செல்வதற்காக தங்களது படகுகளில் பல்வேறு பராமரிப்புப் பணிகளை செய்து சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டனா். மீன்பிடி வலைகள், மிதவைகளைத் தயாா் செய்து படகுகளில் ஏற்றும் பணியிலும் ஈடுபட்டனா்.
தடைக்காலம் முடிந்தநிலையில், மீனவா்கள் வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை கடலுக்குச் செல்ல மாட்டாா்கள் என்பதால், திங்கள்கிழமை (ஜூன் 16) அதிகாலை 5 மணிக்கு கடலுக்குச் செல்லவுள்ளனா்.