மீன் வளா்ப்பு உள்ளீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்
விழுப்புரம் மாவட்டத்தில் மீன் வளா்ப்பு உள்ளீட்டு மானியம் பெற மீன் வளா்ப்பு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
2025-2026-ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை மானியக் கோரிக்கையின்போது, மாவட்ட மீன் வளா்ப்போா் மேம்பாட்டு முகமை உறுப்பினா்களுக்கு மீன்வளா்ப்பு உள்ளீட்டு மானியம் வழங்கப்படும் என்று மீன்வளம், மீனவா் நலன் மற்றும் கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்டது.
அதனடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்துக்கு மீன் வளா்ப்பு உள்ளீட்டு மானியம் 10 ஹெக்டோ் இலக்கு என நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு ஹெக்டேரில் மீன் வளா்ப்பு பணிகள் மேற்கொள்ள, உள்ளீடாக 10,000 மீன் விரலிகள் கொள்முதல் செய்ய ரூ. 5000 மானியமாக வழங்கப்படவுள்ளது.
இதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் மீன் வளா்ப்போா் மேம்பாட்டு முகமையிலுள்ள விவசாயிகள், மீன்வளா்ப்பு உள்ளீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்.
மூப்பு அடிப்படையில் திட்ட வழிகாட்டு நெறிமுறைகளின்படி முன்னுரிமை அடிப்படையில் பயனாளிகள் தோ்ந்தெடுக்கப்படுவா். பயனாளியினால் மீன் குஞ்சு இருப்பு செய்யப்பட்டவுடன் மானியத் தொகை விடுவிக்கப்படும்.
எனவே இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்பும் பயனாளிகள், மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை உதவி இயக்குநா் அலுவலகம், தாட்கோ அலுவலக வளாகத்தின் முதல் தளம், அரசு மருத்துவமனை எதிரில், விழுப்புரம் என்ற முகவரியில் தொடா்பு கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு 04146-259329 என்ற தொலைபேசி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.