முதுநிலை மருத்துவப் படிப்புகள்: பேராசிரியா்களின் விவரம் கோருகிறது என்எம்சி
மும்பையை அச்சுறுத்தும் மழை: பிளே-ஆஃப் செல்லப்போவது யார்?
மும்பையில் பெய்துவரும் கனமழையால், இன்றிரவு(மே 21) நடைபெறும் ஐபிஎல் போட்டி நடைபெறுமா? என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நேற்றிரவு இடியுடன் கூடிய கனமழை பெய்ததால், பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர். மும்பையின் கிழக்கு மற்றும் மேற்கு புறநகர்ப் பகுதிகளில் மழையின் தீவிரம் அதிகமாக இருந்ததாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நடப்பு ஐபில் தொடரில் இன்றிரவு வான்கடேயில் நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, தில்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இரு அணிகளும் இதுவரை 12 போட்டிகளில் விளையாடியுள்ளன. ஆனால், மும்பை அணி 14 புள்ளிகளையும், தில்லி அணி 13 புள்ளிகளையும் பெற்றுள்ளன.
ஏற்கனவே, பெங்களூரு, குஜராத், பஞ்சாப் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறிவிட்டதால் இன்னும் ஒரேயொரு இடம் மட்டுமே உள்ளது. இதனால், இன்றையப் போட்டியில் வெற்றி பெறும் அணி மட்டுமே அடுத்த சுற்றைப் பற்றி நினைத்துப் பார்க்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.
ஒருவேளை மும்பை அணி வெற்றி பெற்றால், 16 புள்ளிகளுடன் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். தில்லி அணி வெற்றி பெற்றால் 15 புள்ளிகளைப் பெற்றிருக்கும். ஆனால், இரு அணிகளும் கடைசிப் போட்டிகளின் முடிவு என்னவாக இருக்கும் என்பதைப் பெற காத்திருக்க வேண்டும்.
மும்பை அணியும் தில்லி அணியும் தங்கள் கடைசி ஆட்டங்களில் பஞ்சாப் கிங்ஸை எதிர்கொள்கின்றன. இரு அணிகளும் பஞ்சாபிடம் தோல்வியைத் தழுவினால், இன்று நடைபெறும் போட்டியில் வென்ற அணிக்கே அதிக வாய்ப்பிருக்கிறது. அதனால், இன்றையப்போட்டி மிகவும் முக்கியம் வாய்ந்தது.
இதற்கிடையே, மற்றொரு சிக்கலாக கர்நாடகத்தின் கிழக்கு அரபிக்கடலிருந்து - மத்திய அரபிக் கடலில் உருவாகும் காற்றத்தழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, மே 21 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை மகாராஷ்டிரத்தின் மும்பை, கொங்கன் ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்றிரவு நடைபெறும் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டால், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்படும். அப்படி, நடந்தால் மும்பை 15 புள்ளிகளுடனும், தில்லி 14 புள்ளிகளுடனும் இருக்கும். அப்படியானாலும், பஞ்சாபுக்கு எதிரான கடைசிப் போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டும்.
தொடக்க ஆட்டங்களில் சிறப்பாக விளையாடிய தில்லி அணி கடந்த ஐந்து போட்டிகளில் ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது. இதனால், மும்பை அணியே பிளே-ஆஃப்ஸுக்கு தகுதிபெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: தோனியிடம் ஆசீர்வாதம் பெற்ற 14 வயது வீரர் சூர்யவன்ஷி..! வைரல் விடியோ!