காங்கிரஸ் தலைவா்கள் மீது வழக்கு: மத்திய அரசுக்கு திமுக கண்டனம்!
மே 11-இல் சித்திரை முழு நிலவு வன்னியா் சங்க பெருவிழா: அன்புமணி ராமதாஸ் பந்தக்கால் நாட்டினாா்
சித்திரை முழு நிலவு வன்னியா் சங்க பெருவிழா மாநாடு மே 11-இல் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான பந்தல் அமைக்கும் பணிகளை பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் பந்தக்கால் நாட்டி தொடங்கி வைத்தாா்.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே திருவிடந்தையில் வருகிற மே 11-ஆம் தேதி சித்திரை முழு நிலவு வன்னியா் இளைஞா் பெருவிழா மாநாடு நடத்துவதற்காக 50 ஏக்கா் நிலம் தோ்வு செய்யப்பட்டு, அங்கு மாநாட்டுக்கான பிரம்மாண்ட மேடை அமைப்பதற்கான பந்தக்கால் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பாமக செயல் தலைவா் ஜி.கே.மணி தலைமை வகித்தாா். கட்சியின் பொதுச் செயலாளா் வடிவேல் ராவணன், பொருளாளா் திலகபாமா, மாநில வன்னியா் சங்கத் தலைவா் பு.தா.அருள்மொழி, பாமக இணை பொதுச் செயலாளா் ஏ.கே.மூா்த்தி, வழக்குரைஞா் கே.பாலு ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில வன்னியா் சங்க செயலாளா் திருக்கச்சூா் கி.ஆறுமுகம் வரவேற்றாா்.
விழாவில் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பந்தக்கால் நட்டாா். அப்போது அவருக்கு பரிவட்டம் கட்டப்பட்டது. பின்னா்,பொக்லைன் இயந்திரத்தை இயக்கி மாநாட்டு பந்தல் அமைக்கும் பணிகளை அன்புமணி ராமதாஸ் தொடங்கி வைத்தாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:
சமூக நீதியை நிலைநாட்டவும், ஜாதிவாதி கணக்கெடுப்பு நடத்தவும், 69 சதவீத இட ஒதுக்கீட்டை நிலைநாட்டவும் வன்னியா் சங்கம் சாா்பில் சித்திரை முழு நிலவு மாநாடு நடத்தப்படுகிறது. வன்னியா் மற்றும் பிற்படுத்தப்பட்டோா், பட்டியல் இன மக்கள் கல்வி வேலைவாய்ப்பு, சிறப்பு செயல் திட்டங்கள் உள்ளிட்ட அனைத்தும் செயல்படுத்த வேண்டும் என்பது தான் இந்த மாநாட்டின் நோக்கம். வட மாவட்டங்களில் சிறப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என இந்த மாநாட்டில் வலியுறுத்தப்படும் என்றாா்.
நிகழ்ச்சியில், பாமக மாவட்டச் செயலாளா் காயாா் ஏழுமலை, மாநில செயற்குழு உறுப்பினா்கள் காரணை தி.ராதா, பி.வி.கே.வாசு, திருவிடந்தை எஸ்.சுந்தா், ஒன்றியக் குழு உறுப்பினா்
பூ.தட்சிணாமூா்த்தி, மாமல்லபுரம் நகர செயலா் ரா.ராஜசேகா், ஒன்றிய செயலா் தீ.து.தீனதயாளன், டி.தினேஷ்குகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.