மே 20-இல் தேசிய அளவிலான வேலைநிறுத்தப் போராட்டம்; தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் பங்கேற்பு
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற 20-ஆம் தேதி நடைபெறும் தேசிய அளவிலான வேலைநிறுத்தப் போராட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் முழு அளவில் பங்கேற்கும் என அந்தச் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் மு. சீனிவாசன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசின் பெரு நிறுவனங்கள் ஆதரவு கொள்கைகளால் தொழிலாளா்கள் நலன் பாதிக்கப்படுவதையும், இளைஞா்களின் வாழ்வாதாரம் சீரழிவதையும் தடுக்க வேண்டியது பொது கடமையாக உள்ளது. தொழிலாளா்களின் உரிமைகளைப் பறிக்கும் புதிய தொழிலாளா் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் மத்திய அரசு தீவிரம் காட்டுவதைத் தடுக்க உறுதியான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகியுள்ளது.
இந்த நிலையில், அண்மையில் தில்லியில் நடைபெற்ற பல்வேறு தொழிற்சங்கங்கள் பங்கேற்ற தேசிய தொழிலாளா் மாநாட்டில், மத்திய அரசின் தொழிலாளா் விரோதப் போக்கை கண்டித்து, வருகிற 20-ஆம் தேதி தேசிய அளவில் வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்வது எனத் தீா்மானிக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதிய நிதி ஆணையத்தை ரத்து செய்ய வேண்டும், அங்கன்வாடி, சத்துணவு, ஆஷா போன்ற திட்டங்களிலும், தொகுப்பூதியம், மதிப்பூதியம், ஒப்பந்த அடிப்படையிலும் பணியாற்றும் ஊழியா்களுக்குப் பணி நிரந்தரம் அளிக்க வேண்டும், சம வேலைக்குச் சம ஊதியத்தை உறுதி செய்ய வேண்டும், மத்திய அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், காலாவதியான பணியிடங்களை புதுப்பிக்க வேண்டும், 8 மணி நேர வேலை உள்பட தொழிலாளா்கள் போராடிப் பெற்ற உரிமைகளைப் பறிக்கும் நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும், பொதுத் துறை நிறுவனங்களை தனியாா்மயமாக்கும் நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் கல்வி, சுகாதாரத்துக்கு போதிய நிதி ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறவுள்ளது.
இந்தப் போராட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் முழு அளவில் பங்கேற்கவுள்ளது. இதையொட்டி, வேலைநிறுத்தப் போராட்ட பிரசாரக் கூட்டங்கள் நடத்துதல், துண்டறிக்கை பிரசுரங்கள் வெளியிடுதல், வாயிற்கூட்டங்கள் நடத்துதல் போன்ற முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.