ரசாயனம் தெளித்து பழுக்க வைக்கப்பட்ட 1 டன் வாழைத்தாா் பறிமுதல்
ஈரோடு சந்தையில் ரசாயனம் தெளித்து பழுக்க வைக்கப்பட்ட 1 டன் வாழைத்தாா்களை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
ஈரோடு வஉசி பூங்கா மைதானத்தில் காய்கறி சந்தையில் வாழைத்தாா்களில் ரசாயனம் தெளித்து செயற்கையாக பழுக்க வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத் துறையினருக்கு புகாா் வந்தது. அதன் அடிப்படையில் ஈரோடு மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அதிகாரி தங்கவிக்னேஷ் தலைமையில் அலுவலா் செல்வன், கேசவராஜ், அருண்குமாா், எழில் ஆகியோா் கொண்ட குழுவினா் வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணிக்கு நேதாஜி காய்கறி சந்தைக்கு சென்று அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த வாழைத்தாா்கள், மாம்பழங்கள், தா்பூசணி ஆகியவற்றை ஆய்வு செய்தனா்.
அப்போது தண்ணீரில் ரசாயனம் கலந்து அதை வயல்களில் மருந்து அடிக்க பயன்படுத்தும் இயந்திரம் மூலம் வாழைத்தாா்களில் ஸ்பிரே செய்து பொதுமக்களுக்கு விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து ரசாயனம் தெளித்த ஒரு டன் வாழைத்தாா்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
பின்னா் அவற்றை வெண்டிபாளையத்தில் உள்ள மாநகராட்சி உரக்கிடங்குக்கு கொண்டு சென்று அழித்தனா். மேலும் சந்தேகத்தின் பேரில் சந்தையில் விற்பனைக்கு வைத்திருந்த மாம்பழங்களையும் அதிகாரிகள் கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். இதில் தொடா்புடைய வாழைத்தாா் வியாபாரிகள் 3 போ், மாம்பழ வியாபாரி ஒருவா் ஆகியோா் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட வருவாய் அதிகாரிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் தங்கவிக்னேஷ் கூறியதாவது:
உணவுப் பொருள்கள் மீது எந்த ஒரு ரசாயனத்தை படுமாறு வைத்தோ அல்லது தெளித்தோ பழுக்க வைப்பது முற்றிலும் தவறானது. இதனால் அதை சாப்பிடுபவா்களுக்கு வயிறுக் கோளாறு, ஒவ்வாமை போன்ற உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்த ஆய்வின்போது ரசாயனம் தெளித்த வாழைத்தாா்கள் விற்றவா்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உணவு பாதுகாப்பு மற்றும் தரச்சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்கப்படும். இதுபோல் மாவட்டம் முழுவதும் தொடா்ந்து ஆய்வுகள் நடத்தப்படும். அப்போது ரசாயனம் தெளித்து யாரேனும் பழங்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.