ராமதாஸ், அன்புமணி தனது அறையில் ஆஜராக சொல்லும் நீதிபதி! - இன்று மாலை நடக்குமா அந்த சந்திப்பு?
பாமக-வில் தந்தை-மகன் இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இருவர் தரப்பிலும் பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அன்புமணி ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டுமென ராமதாஸால் நியமிக்கப்பட்ட மாநில பொதுச்செயலாளர் முரளி சங்கர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நான் தான் தலைவர்
அதில், கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்ட அன்புமணியின் பதவிக்காலம் கடந்த மே மாதம் 28ம் தேதியுடன் நிறைவடைந்து விட்டதாக கூறப்பட்டுள்ளது.
புதிய தலைவராக ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டு கடந்த மே மாதம் 30ம் தேதியில் இருந்து அவர் தலைவராக செயல்பட்டு வருவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில தலைவரின் பதவிக்காலம் முடிவடைந்தால் அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு மற்றும் கட்சி நிர்வாக பொறுப்பு உள்ளிட்டவை கட்சியின் நிறுவனருக்கே உள்ளது என கடந்த ஜூலை ஏழாம் தேதி நடைபெற்ற மாநில செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
கட்சியின் பொதுக்குழு, அவசர பொதுக்குழு , செயற்குழு கூட்டத்தை கூட்ட கட்சியின் நிறுவனருக்கே அதிகாரம் உள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செயல் தலைவராக நியமிக்கப்பட்ட அன்புமணி கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும், குழப்பம் விளைவிக்கும் வகையிலும் செயல்பட்டதாகவும், தன்னைத்தானே தலைவர் என சொல்லிக்கொண்டு அன்புமணி செயல்படுவதாகவும் மனுவில் விமர்சிக்கப்பட்டுள்ளது. கட்சி தலைவரும், நிறுவனருமான ராமதாஸின் அனுமதியில்லாமல் அன்புமணி 100 நாள் நடைப்பயணத்தை மேற்கொண்டு வருவதாகவும் இதற்கெதிராக டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
சட்டம் ஒழுங்கு பிரச்னை
இந்நிலையில், கட்சியின் பொதுக்குழு கூட்டம் வரும் ஒன்பதாம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெறும் என கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் உள்நோக்கத்துடன் அன்புமணி அறிவித்துள்ளார்.
மேலும், அன்புமணியின் இந்த அறிவிப்பால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, அன்புமணி ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டுமென மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோரை 5:30 மணிக்கு தனது அறையில் நேரில் ஆஜராக கேட்டுக்கொண்டார்.
பாமக-வில் பிரச்னை வெடித்த பின்னர் ராமதாஸ் அன்புமணி ஆகியோர் சந்தித்துகொள்ள வில்லை. இந்த நிலையில் நீதிபதி ஆஜராக கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கு அவர்கள் நேரடியாக செல்வார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.