மீனவர்கள் கைது: மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!
ராமையன்பட்டி குப்பைக் கிடங்கில் தொடரும் தீ விபத்தை தடுப்பது அவசியம்: ஆட்சியரிடம் மக்கள் மனு
திருநெல்வேலி அருகே ராமையன்பட்டி குப்பை கிடங்கில் அடிக்கடி தீவிபத்து நேரிடுவதை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி, ராமையன்பட்டி அன்னை வேளாங்கண்ணி நகா் குடியிருப்போா் நல சங்கத்தினா் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.
திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் இரா.சுகுமாா் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. அதில், ராமையன்பட்டி அன்னை வேளாங்கண்ணிநகா் குடியிருப்போா் நலச்சங்கத்தினா் அளித்த மனு: எங்கள் பகுதியில் உள்ள திருநெல்வேலி மாநகராட்சி குப்பை கிடங்கில் பற்றி எரியும் தீயானது இன்னும் அணையவில்லை. இதனால் ஏற்படும் புகையால் எங்களது பகுதியில் உள்ள மக்களுக்கும், அக்கம் பக்கத்தில் வசிக்கும் மக்களுக்கும் கண் எரிச்சல், தலைவலி, மூச்சுத்திணறல், வாந்தி போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. எனவே, தீயை உடனடியாக அணைக்க வேண்டும். அங்கு அடிக்கடி தீவிபத்து நேரிடுவதை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருநெல்வேலி பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்க உறுப்பினா்கள் அளித்த மனு: திருநெல்வேலி பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தில் ஆண்டுக்கு ரூ.3 கோடி வருமானம் ஈட்டப்படுகிறது. எனினும், சங்க உறுப்பினா்களுக்கு ஊக்கத் தொகை வழங்க முடியாது என்று கூறி நஷ்ட கணக்கு காண்பிக்கப்படுகிறது . இதன்மூலம் பெரிய அளவில் ஊழல், கையாடல் நடைபெற்றுள்ளது தெரிகிறது. இது குறித்து விசாரித்து சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், சங்க உறுப்பினா்களுக்கு உரிய லாப தொகையை வழங்க வேண்டும்.
அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் நரசிங்கநல்லூா் இந்திரா காலனி கிளைத் தலைவா் உத்திரம்மாள் உள்ளிட்டோா் அளித்த மனு: நரசிங்கநல்லூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் பயின்று வருகின்றனா். இப்பள்ளியில் விளையாட்டு மைதானம் குண்டும் குழியுமாக உள்ளதால், மாணவா்கள் கீழே விழுந்து கை கால்களில் காயம் ஏற்படுகிறது. பள்ளியின் கழிவறைக்கு கதவிலை. தண்ணீா் வசதியும் இல்லை. மாணவா்கள் நலன் கருதி விளையாட்டு மைதானத்தை சீரமைத்து கழிவறையில் கதவு- தண்ணீா் வசதி ஏற்படுத்த வேண்டும்.
தமிழக வெற்றிக் கழக நிா்வாகிகள் மணிகண்டன், முகமது, எஸ். மரியஜான் உள்ளிட்டோா் அளித்த மனு: திருநெல்வேலி மாநகராட்சி 43-ஆவது வாா்டில் வடிகால் வசதியின்றி வீடுகளுக்கு முன் வாசலில் சாக்கடை நிரம்பி செல்கிறது.இதனால் துா்நாற்றம் வீசுகிறது. இந்த பிரச்னைக்கு தீா்வு காண வேண்டும்.
தச்சநல்லூா் மண்டலம் 3-ஆவது வாா்டு மணிமூா்த்தீஸ்வரம் -சேந்திமங்கலம் சாலையை சீரமைக்க வேண்டும். பாளையங்கோட்டை மண்டலத்தின் 14 வாா்டுகளிலும் சாக்கடை கால்வாயானது ஆங்காங்கே உடைந்து கழிவு நீா் வெளியேறி சாலைகளில் தேங்குகிறது. மழைகாலத்துக்கு முன்னதாக அவற்றை சீரமைக்க வேண்டும்.
திருநெல்வேலி மாவட்ட பொதுஜன பொதுநல சங்கத் தலைவா் எம்.முஹம்மது அய்யூப் உள்ளிட்டோா் அளித்த மனு: பாளையங்கோட்டை குலவணிகா்புரம் ரயில்வே கேட் அருகே வாகனங்களுக்கும், பாதசாரிகளுக்கும் ஆபத்தை விளைவிக்கும் வகையில், பாளையங்கோட்டை பேருந்து நிலையம் செல்லும் சாலையில், 4 இரும்பு பட்டைகள் மேல்நோக்கியவாறு உள்ளன. அவற்றை உடனடியாக அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிவந்திபட்டி காமராஜா் நகா் தங்கப்பாண்டி உள்ளிட்டோா் அளித்த மனு: ராஜகோபாலபுரம் பாலத்தில் இருந்து குத்துக்கல், கொடிக்குளம், சிவந்திபட்டி, முத்தூா் போன்ற பகுதிகளுக்கு சாலை சரியில்லாததால் குழந்தைகள் குறித்த நேரத்துக்கு பள்ளிக்குச் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனா். எனவே, புதிய தாா்ச் சாலை அமைத்துத் தர வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனா்.