பாகிஸ்தானுடன் உறவு வேண்டாம்; கிரிக்கெட் மட்டும் வேண்டுமா? -மத்திய அரசுக்கு ஓவைசி கேள்வி
புது தில்லி: பாகிஸ்தானுடன் உறவை முறித்துக்கொண்ட மத்திய அரசு கிரிக்கெட் விளையாட மட்டும் அனுமதிக்கலாமா? என்று ஓவைசி கேள்வியெழுப்பியுள்ளார்.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தானிலிருந்து ஊடுருவிய பயங்கரவாதிகள் நடத்திய கொடுமையான தாக்குதலைத் தொடா்ந்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் போக்கு நிலவுகிறது.
பாகிஸ்தானுடன் பேச்சுவாா்த்தை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் பயங்கரவாதம் குறித்து மட்டுமே பேசப்படும். பயங்கரவாதமும், அண்டை நாட்டுடன் நல்லுறவும் ஒருசேர இருக்க முடியாது. இதுவே தற்போது இந்தியாவின் நிலைப்பாடு என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் மக்களவையில் திங்கள்கிழமை(ஜூலை 28) விளக்கமளித்துள்ளார்.
இந்தநிலையில், மக்களவையில் பேசிய ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சித் தலைவரும் எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி, செப்டம்பரில் தொடங்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவும் பாகிஸ்தானும் விளையாடுவதற்கு மத்திய அரசு தடை விதிக்காததைக் கண்டித்துள்ளார்.
ஓவைசி பேசுகையில், "பாகிஸ்தானுடன் வர்த்தகம் நிறுத்தப்பட்டுள்ளது; அந்நாட்டுக்கு இங்கிருந்து தண்ணீர் திறந்துவிடப்படுவதும் நிறுத்தப்பட்டுள்ளது; அப்படியிருக்கும்போது, அவர்களுடன் கிரிக்கெட் மட்டும் எப்படி விளையாட முடியும்? இதற்கு யார் பொறுப்பு? பாகிஸ்தான் ராணுவமும் ஐ.எஸ்.ஐ.யும் இந்தியாவை வலு இழக்கச் செய்ய விருப்பப்படுகின்றன” என்று குறிப்பிட்டுள்ளார்.