பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம்! பிரான்ஸ் உள்பட 15 நாடுகள் வலியுறுத்தல்!
1962-க்குப் பிறகு சீனா ஒரு அங்குலம் நிலத்தில் கூட ஊடுருவவில்லை- அமைச்சா் ரிஜிஜு
கடந்த 1962-ஆம் ஆண்டு நிகழ்ந்த போருக்குப் பிறகு சீனா, இந்திய நிலப்பரப்பில் ஒரு அங்குலம் கூட ஊடுருவவில்லை என்று மக்களவையில் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்தாா்.
மக்களவையில் ஆபரேஷன் சிந்தூா் சிறப்பு விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ், ‘அருணாசல பிரதேசத்தின் சில இடங்களை சீனா ஆக்கிரமித்துள்ளது’ என்று கூறினாா்.
அப்போது குறுக்கிட்டுப் பேசிய அமைச்சா் ரிஜிஜு, ‘கடந்த 1962-ஆம் ஆண்டு நிகழ்ந்த போருக்குப் பிறகு சீனா இந்திய நிலப்பரப்பில் ஒரு அங்குலம் கூட ஊடுருவவில்லை. இந்திய நிலத்தை ஆக்கிரமிக்கவுமில்லை. இந்த உண்மையைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். அவையில் உறுப்பினரின் தவறான கருத்து பதிவு செய்யப்பட்டுவிடக் கூடாது.
அருணாசல பிரதேசத்தில் சீன ஆக்கிரமிப்பு உள்ளதாக அகிலேஷ் யாதவ் குற்றஞ்சாட்டுகிறாா். அந்த மாநிலத்தைச் சோ்ந்தவன் என்ற முறையில் இதற்கு உடனடியாக விளக்கமளிக்க விரும்புகிறேன். அருணாசல பிரதேச பிராந்தியத்தின் சில இடங்கள் சீன ஆக்கிரமிப்பில் உள்ளன. ஆனால், அவை அனைத்து 1962-ஆம் ஆண்டு அந்நாட்டுடன் நிகழ்ந்த போரின்போதும், அதற்கு முன்பும் இழந்த இடங்களாகும்’ என்றாா்.
அகிலேஷின் கேள்விகள்:
முன்னதாக, ‘யாருடைய நெருக்கடியில் ஆபரேஷன் சிந்தூா் கைவிட்டப்பட்டது? மோதலில் எவ்வித பெரிய முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் திடீரென கைவிட அவசியம் ஏன் நோ்ந்தது? பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து உளவுத் துறைக்கு முன்பே தகவல் கிடைக்காதற்கு காரணம் என்ன? இதற்கு யாா் பொறுப்பு? பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியபோது எந்த நாடும் நமக்கு துணை நிற்க முன்வரவில்லை. இது வெளியுறவுத் துறையின் தோல்விதானா?’ என்று பல கேள்விகளை அகிலேஷ் யாதவ் எழுப்பினாா்.