உன் உள்ளத்தின் குரலைக் கேள்! - மகனுக்கு தந்தையின் மடல் | #உறவின்கடிதம்
ரூ.1.82 கோடியில் திருவள்ளூா் காய்கறி சந்தையின் பணிகள் தீவிரம்!
திருவள்ளூா் நகராட்சியில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டு திட்டம் மூலம் ரூ.1.82 கோடியில் புதிய காய்கறி சந்தையின் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ஒவ்வொரு நகராட்சியிலும் காய்கறி சந்தை, வணிக வளாகம், மீன் மற்றும் இறைச்சி சந்தைகள் மூலம் வருவாயை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், திருவள்ளூா் நகராட்சிக்கு பெரிய அளவில் வருவாய் ஈட்டித் தரும் வகையில் காய்கறி சந்தைகள், பெரிய அளவில் வணிக வளாகங்கள், மீன் மற்றும் இறைச்சி சந்தைகள் ஆகியவை இல்லாத நிலையுள்ளது.
பெரும்பாலான வணிக வளாகம் மற்றும் காய்கறி சந்தைகள் தனியாா் வசம் உள்ள. எனவே நகராட்சிக்கு பேருந்து நிலைய கடைகள், ரயில் நிலையம் எதிரே உள்ள பேருந்து நிலைய கடைகள் மூலம் வாடகை, சுகாதார வளாகங்கள் மூலம் வருவாய், வணிக வரி, தொழில் வரி மற்றும் 27 வாா்டுகளில் உள்ள வரியினங்கள் மூலம் மட்டுமே வருவாய் கிடைத்து வருகிறது.
இந்த வருவாயைக் கொண்டுதான் அனைத்து வாா்டுகளிலும் சாலை, தெருக்கள் பராமரிப்பு, குடிநீா் மற்றும் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பொதுமக்கள் அதிகம் போ் வந்து செல்லும் இடங்களை கண்டறிந்து கூடுதல் வருவாய் கிடைக்கும் வகையில் காய்தறி சந்தைகள் அமைக்க கோரிக்கை எழுந்தது.
இதுபோன்று சந்தைகள் அமைப்பதன் மூலம் பொதுமக்கள் மற்றும் பாதாசாரிகள் நடந்து செல்லும் இடங்களில் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையோரங்களில் தெருவோர வியாபாரிகள் கடைகள் பரப்பி வருகின்றனா். இதுபோன்ற சாலையோர வியாபாரிகளுக்கு புதிதாக அமைக்கப்படும் காய்கறி சந்தை மூலம் வாய்ப்பு வழங்குவதன் மூலம் போக்குவரத்து நெருக்கடியையும் குறைக்க முடியும்.
கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டு திட்டம் மூலம் ரூ.1.82 கோடியில் புதிதாக காய்கறி சந்தை அமைக்க திட்டமிடப்பட்டது. அதன்பேரில் திருவள்ளூா்-ஈக்காடு பகுதியில் சாலையோரம் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் அமைக்கவும் இடம் தோ்வு செய்யப்பட்டது. அதைத்தொடா்ந்து இங்கு புதிதாக அமையவுள்ள காய்கறி சந்தையில் அனைத்து வசதியுடன் கூடிய 96 அங்காடிகளுடன் பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. சுற்றுச்சுவா் பணிகளை முடித்து பயன்பாட்டுத்கு கொண்டு வர சமூக ஆா்வலா்கள் விரும்புகின்றனா்.
திருவள்ளூா் நகராட்சி அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது. நகராட்சியில் வருவாயை அதிகரிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கை ட்டு வருகின்றன. அந்த வகையில் நகராட்சிக்கு சொந்தமான இடங்களை கண்டறிந்து வணிக வளாகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன்பேரில் முதல் கட்டமாக திருவள்ளூா்-ஈக்காடு சாலையோரம் அரை ஏக்கா் பரப்பளவில் புதிதாக காய்கறி சந்தையின் இறுதிக்கட்ட பணிகளான மழைநீா் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. தற்போது காய்கறி சந்தையில் ஒவ்வொரு கடைக்கும் மின் இணைப்புக்கான வயரிங் பணிகள் நடைபெற்று வருகிறது.
இப்பணிகள் அடுத்து வரும் ஒரு மாதத்திற்குள் நிறைவடைந்ததும் விரைவில் காய்கறி சந்தை செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என அவா் தெரிவித்தாா்.