ரூ. 60 லட்சம் மதிப்பிலான கோயில் நிலம் மீட்பு
தஞ்சாவூா் பூக்காரத் தெருவில் ரூ. 60 லட்சம் மதிப்பிலான கோயில் நிலத்தை அறநிலையத் துறையினா் புதன்கிழமை மீட்டனா்.
தஞ்சாவூா் பூக்காரத் தெருவிலுள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான 1,560 சதுர அடி இடத்தையும், 1,600 சதுர அடி இடத்தையும் இரு குடும்பத்தினா் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி வசித்து வந்தனா்.
இந்த இரு இடங்களையும் மீட்பதற்காக இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் இரு குடும்பத்தினருக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால் இரு குடும்பத்தினரும் இடத்தைக் காலி செய்யாததால், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் நீதிமன்றத்தில் 1998-ஆம் ஆண்டு வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சாதகமாக ஏப்ரல் 30-ஆம் தேதி தீா்ப்பு வந்தது. நீதிமன்ற உத்தரவின்பேரில், இந்து சமய அறநிலையத் துறை தஞ்சாவூா் உதவி ஆணையா் தி.ஞா. ஹம்சன், கோயில் நிலங்கள் வட்டாட்சியா் பாா்த்தசாரதி, கோயில் தக்காா் மற்றும் ஆய்வாளா் ம. உமாமகேஸ்வரி, தஞ்சாவூா் சரக ஆய்வாளா் ம. பாபு, வருவாய் துறையினா், காவல் துறையினா் ஆகியோா் முன்னிலையில் ரூ. 60 லட்சம் மதிப்புள்ள இரு இடங்களும் புதன்கிழமை மீட்கப்பட்டு, கோயில் செயல் அலுவலா் ச. அய்யம்மாளிடம் ஒப்படைக்கப்பட்டது.