செய்திகள் :

ரூ. 840 கோடி நெல் மூட்டைகள் சேதம்! திமுக அரசுக்கு அன்புமணி கண்டனம்

post image

நெல் கொள்முதல் நிலையங்கள், கிடங்குகளில் 5 ஆண்டுகளில் ரூ.840 கோடி மதிப்புள்ள நெல் சேதமடைந்ததாகக் கூறி, கட்டமைப்புகளை ஏற்படுத்தத் தவறிய திமுக அரசே பொறுப்பேற்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, பாமக தலைவர் அன்புமணி தனது எக்ஸ் பக்கத்தில் கூறுகையில், தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் நிலையங்கள், கிடங்குகள் ஆகியவற்றில் வைக்கப்பட்டிருந்த ரூ. 840 கோடி மதிப்புள்ள நெல் மூட்டைகள், கடந்த ஐந்தாண்டுகளில் சேதமடைந்திருப்பதாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் பெறப்பட்ட தகவல்களில் தமிழக அரசு ஒப்புக்கொண்டிருக்கிறது.

நெல் மூட்டைகளை சேமித்து வைப்பதற்கான அடிப்படைக் கட்டமைப்புகளைக்கூட ஏற்படுத்தாமல், ஆண்டுக்கு சுமார் ரூ. 200 கோடி அளவுக்கு மக்கள் வரிப் பணத்தை தமிழக அரசு வீணடிப்பது கண்டிக்கத்தக்கது.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழ் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இருந்து பெறப்பட்ட தகவல்கள் மூலம் 2019 - 20 ஆம் ஆண்டில் தொடங்கி, 2023 - 24 ஆம் ஆண்டு வரையிலான 5 ஆண்டுகளில், ஒவ்வோர் ஆண்டும் தலா 1.25 லட்சம் டன் வரை நெல்/அரிசி மூட்டைகள், பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதமடைந்திருக்கின்றன என்று தெரியவந்துள்ளது.

ஐந்தாண்டுகளில் இவ்வாறு சேதமடைந்த நெல்/அரிசியின் மதிப்பு மட்டும் ரூ. 840 கோடி. சேதத்தின் மதிப்பை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் முழுமையாக தெரிவிக்கவில்லை. முழுமையான பாதிப்பு தெரிய வந்தால், சேதத்தின் மதிப்பு இன்னும் அதிகமாக இருக்கலாம்.

நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை, அடுத்த சில நாள்களுக்கு சேமித்து வைக்க இடவசதி இல்லாதது, நெல் சேமிப்புக் கிடங்குகளில் கூரைகள் ஒழுகுவது, சுவர்களில் விரிசல் ஏற்பட்டிருப்பது, எலித் தொல்லைகள் கட்டுப்படுத்தப்படாதது போன்றவைதான் நெல் மூட்டைகள் சேதமடைவதற்கு காரணம் என்று வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

ஐந்தாண்டுகளில் ஏற்பட்ட சேதத்தின் மதிப்பு மட்டும்தான், இப்போது வெளியாகியுள்ளது. உண்மையில் பல பத்தாண்டுகளாக நெல் மூட்டைகள் சேதமடைவதும், மக்களின் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் வரிப்பணம் வீணாவதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் அரசுக்கு ஏற்படும் இழப்புகள் ஒருபுறம் இருக்க, நெல் கொள்முதல் நிலையங்களில் போதிய இடவசதி இல்லாததால் உழவர்கள் கொண்டு வந்த நெல் மூட்டைகள், மழையில் நனைந்து வீணாவதும் ஆண்டுதோறும் நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கிறது. கிடங்குகள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தத் தவறிய தமிழக ஆட்சியாளர்கள் தான் இந்த இழப்புகளுக்கு பொறுப்பேற்க வேண்டும்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கட்டுப்பாட்டில் 308 கிடங்குகள் மட்டுமே உள்ளன. அவை போதுமானவை அல்ல என்பதாலும், கொள்முதல் செய்யப்படும் வேளாண் விளைபொருட்களை பாதுகாப்பாக இருப்பு வைக்க வேண்டும் என்பதாலும், கிடங்குகளின் எண்ணிக்கையை 600-ஆக உயர்த்த வேண்டும்; நெல்கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் வீணாவதைத் தடுக்க ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் 1000 டன் நெல் மூட்டைகளை சேமித்து வைக்கும் அளவுக்கு கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், இத்தகைய ஆக்கப்பூர்வமான யோசனைகளை தமிழக அரசு கண்டுகொள்வதில்லை.

தமிழகத்தில் ஆண்டுக்கு சராசரியாக 30 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்படுவதாகவும், கிடங்குகளில் ஆண்டுக்கு சராசரியாக ரூ. 200 கோடி இழப்பு ஏற்படுவதாகவும் வைத்துக்கொண்டால், இழப்பான தொகையைக் கொண்டு ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ. 66 கூடுதல் ஊக்கத்தொகையாக வழங்க முடியும்.

ஆனால், உழவர்களுக்கு கூடுதல் விலை வழங்க மறுக்கும் தமிழக அரசு, அந்த தொகையை வீணடிக்கிறது. இதற்கு முடிவு கட்டும் வகையில் கொள்முதல் நிலையங்களிலும், கிடங்குகளிலும் பாதுகாப்பாக நெல் மூட்டைகளை சேமித்து வைப்பதற்கு வசதியாக கூடுதல் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க:குருமூர்த்தி, சைதை துரைசாமியுடனான சந்திப்பு நட்பு ரீதியிலானது: ராமதாஸ்

குரூப் 2 தோ்வு: சான்றிதழ் பதிவேற்றத்துக்கு அவகாசம்

குரூப் 2 எழுத்துத் தோ்வில் தோ்ச்சி பெற்றோா் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்ட செய்திக் குறிப்பு: குரூப் 2 ... மேலும் பார்க்க

இசைப் பள்ளி தோ்ச்சி சான்றிதழ் பிளஸ் 2, 10-ஆம் வகுப்பு தோ்ச்சி சான்றிதழுக்கு இணையானது: அரசாணை வெளியீடு

இசைப் பள்ளிகளில் வழங்கப்படும் தோ்ச்சி சான்றிதழ் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு தோ்ச்சிக்கு இணைத்தன்மை வாய்ந்தது என தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக பள்ளிக் க... மேலும் பார்க்க

தமிழக அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும்: திமுகவினருக்கு முதல்வா் ஸ்டாலின் அறிவுரை

சட்டப் பேரவைத் தோ்தலுக்கான பிரசாரத்தை தொடங்கும் விதமாக, தமிழக அரசின் சாதனைகள், நலத் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்று திமுக நிா்வாகிகளுக்கு அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ... மேலும் பார்க்க

சேலம்: வாழப்பாடி அருகே கார் விபத்து - 4 பேர் பலி

சேலம்: சென்னையிலிருந்து கர்நாடகம் நோக்கிச் சென்று கொண்டிருந்த 7 பேர் அமர்ந்து பயணிக்க கூடிய சொகுசு கார் ஒன்று சாலையோர தடுப்பில் மோதி இன்று(ஜூன் 7) விபத்துக்குள்ளானது. சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகேயுள... மேலும் பார்க்க

கிளாம்பாக்கம் அல்ல கிளர்ச்சிப்பாக்கம் - பயணிகள் அலைக்கழிப்பு: தவெக கண்டனம்!

சென்னை: சென்னை புறநகர்ப் பகுதியான கிளாம்பாக்கத்தில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு புதிய பேருந்து நிலையத்தில் தேவைக்கேற்ப பேருந்துகளை இயக்காமல் மக்களைக் கைக்குழந்தைகளோடு அலைக்கழித்து திமுக அரசு அவதிக்கு... மேலும் பார்க்க

இன்று வரை கிளாம்பாக்கம் பரிதாபங்கள் ஓய்ந்த பாடில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

இன்று வரை கிளாம்பாக்கம் பரிதாபங்கள் ஓய்ந்த பாடில்லை என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில்,நிர்வாகத் திறனற்ற ஆட்சிக்கு, கிளாம்பாக்க... மேலும் பார்க்க