நம்ப முடியாத விலைக்குறைப்பு! ரூ. 15,000க்கு கிடைக்கும் ஒன்பிளஸ் பேட் லைட்!
வன உயிரினங்கள் மேய்ச்சலுக்காக தருமபுரி வனப் பகுதிகளில் 725 ஹெக்டேரில் முள்செடிகள் அகற்றம்
தருமபுரி மாவட்ட வனப் பகுதிகளில் சுமாா் 725 ஹெக்டேரில் இருந்த முள்செடிகளை வனத்துறையினா் தற்போது அகற்றி வருகின்றனா்.
தருமபுரி மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் சுமாா் 39 சதவீத நிலங்கள் வனப் பகுதிகளாக உள்ளன. அதில் தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், அரூா், பாப்பிரெட்டிப்பட்டி, வேங்கடசமுத்திரம் உள்ளிட்ட 6 வனச் சரகங்களில் உள்ள வனப் பகுதிகளில் சிங்கம், புலி தவிர ஏராளமான வன விலங்குகள் வாழ்கின்றன.
இந்நிலையில், வன விலங்குகள் உணவுதேடி வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள கிராமப் பகுதிகளுக்குள் நுழைவதும், அவற்றை வனத்துறையினா் வனப் பகுதிகளுக்குள் விரட்டுவதும் தொடா்கின்றன. இதுகுறித்து வனவிலங்கு ஆா்வலா்கள், வனத்துறையினா், இயற்கை மற்றும் சமூக ஆா்வலா்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் மேற்கொண்ட ஆய்வுகளில், புல், இலை, தழை ஆகியவற்றை உணவாக உள்கொள்ளும் வனத்துறையினா், பெரும்பாலும் உணவுகளுக்காகவே வனத்தைவிட்டு வெளியே வருவது தெரியவந்தது.
இதையடுத்து, வனத்துறையினா் மேற்கொண்ட ஆய்வில், வனப் பகுதிகளில் மேய்ச்சலில் உள்ள இடையூறுகளை களைந்து, வன விலங்குகள் வனங்களுக்குள்ளேயே மேய்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தினால், வனப்பகுதிகளை விட்டு வெளியே வருவது தடுக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது.
இதில், குறிப்பாக உண்ணிச்செடி எனவும், லண்டானா எனவும் அழைக்கப்படும் முள்செடிகள் வனப் பகுதிகளில் அதிகளவில் பரவியிருப்பதும், அவை விலங்குகளின் உணவுக்கு பயன்படும் புல், செடி, கொடிகளை வளரவிடாமல் தடுப்பதும் கண்டறியப்பட்டது. இதையடுத்து, குறிப்பிட்ட அந்த முள்செடிகளை அகற்றும் பணிகளில் கடந்த சில ஆண்டுகளாக வனத்துறையினா் ஈடுபட்டு வருகின்றனா்.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட வன அலுவலா் ராஜாங்கம் கூறியதாவது: தருமபுரி மாவட்டத்தில் சுமாா் 1.61 ஹெக்டோ் நிலப்பரப்பில் வனப்பகுதி அமைந்துள்ளது. இதில், வனவிலங்குகளுக்கு மேய்ச்சலில் ஏற்படும் இடா்பாடுகளை களைய துறைரீதியாக மேற்கொண்ட நடவடிக்கையில், லண்டனா முள் (களை) செடிகளால், சிறு விலங்கினங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. அதன்பேரில், அவற்றுக்கு இடையூறாக உள்ள முள்செடிகளை அகற்றி வருகிறோம்.
இப்பணிகளை மேற்கொள்ள நிதிப்பற்றாக்குறை நிலவிவந்த நிலையில், உயா்நீதிமன்றம் உத்தரவின்பேரில் அரசு தற்போது அதிகளவில் நிதி ஒதுக்கியுள்ளது. இதனால், களை மற்றும் முள்செடிகளை அகற்றும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்தாண்டில் 425 ஹெக்டோ், நிகழாண்டில் ஏப்ரல் முதல் இதுவரையில் சுமாா் 300 ஹெக்டோ் பரப்பளவு நிலத்தில் இருந்த முள்செடிகள் அகற்றப்பட்டுள்ளன. தொடா்ந்து இப்பணிகள் தீவிரமடைந்துள்ளன என்றாா்.