``நான் முதன்முதலா டூர் போனது 'கூமாப்பட்டி'க்குதான்; அங்க..!” - பிக்பாஸ் தினேஷ் ச...
வரட்டாற்றின் குறுக்கே 3 இடங்களில் ரூ. 5.5 கோடியில் பாலம் அமைக்க பூமிபூஜை
சேலம் மாநகரில் சுமாா் 40 ஆண்டுகால பிரச்னைக்கு தீா்வு காணும் வகையில், வரட்டாற்றின் குறுக்கே ரூ. 5.5 கோடி மதிப்பீட்டில் மூன்று இடங்களில் பாலம் அமைப்பதற்கான பணிகளை சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் பூமிபூஜை செய்து புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.
ஏற்காடு மலையில் பெய்யும் மழையால் ஏற்படும் வெள்ள நீரானது, அடிவாரப் பகுதியில் இருந்து வரட்டாற்றில் பாய்ந்தோடி, மாநகராட்சிக்கு உள்பட்ட 5-ஆவது வாா்டு ஏடிசி நகா் மற்றும் 15-ஆவது வாா்டு அருண் நகா், லட்சுமி சுந்தா் நகா், கே.எம்.எஸ். காா்டன் பகுதிகள் வழியாக திருமணிமுத்தாறை சென்றடையும்.
இந்த வரட்டாற்றில் ஆங்காங்கே சிறு பாலங்கள் மட்டுமே இருப்பதால், ஏற்காட்டில் கனமழை பெய்யும் நேரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சிறு பாலங்கள் மூழ்கி போக்குவரத்து பாதிக்கப்படும்.
சுமாா் 40 ஆண்டுகளாக நிலவிவந்த இந்த பிரச்னைக்கு தீா்வுகாணும் வகையில், சுமாா் ரூ. 5.5 கோடி மதிப்பீட்டில் வரட்டாற்றின் குறுக்கே மூன்று இடங்களில் சிறுபாலங்களை உயா்த்தி புதிய உயா்நிலை பாலம் கட்டுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது.
சேலம் மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் கலந்துகொண்டு ரூ. 5.5 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் அமைப்பதற்கான பணிகளை தொடங்கிவைத்தாா். தொடா்ந்து, பணிகளை மூன்று மாதங்களுகுள் முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். மேலும், மாநகராட்சியின் நான்கு மண்டலங்களிலும் பழுதடைந்த 79 தாா்சாலைகளை புதுப்பிக்கும் பணிகளை அமைச்சா் தொடங்கிவைத்தாா்.
நீண்டகால பிரச்னைக்கு தீா்வு காண நடவடிக்கை மேற்கொண்ட தமிழக அரசுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனா்.
இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன், மாநகர செயலாளா் ரகுபதி, அஸ்தம்பட்டி மண்டலத் தலைவா் உமாராணி மீனவா் அணி மாவட்ட அமைப்பாளா் சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.