வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: சி.ராபா்ட் புரூஸ் எம்.பி. வலியுறுத்தல்
திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வளா்ச்சி திட்டப் பணிகளை அரசு அதிகாரிகள் விரைவாக முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ் வலியுறுத்தினாா்.
திருநெல்வேலி மாவட்டத்தில் மத்திய அரசு மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகள் குறித்த ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் முன்னிலையில் ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.இக்கூட்டத்துக்கு, சி.ராபா்ட் புரூஸ் எம்.பி. தலைமை வகித்து அலுவலா்களுடன் ஆலோசனை நடத்தினாா்.
பின்னா் அவா் கூறியதாவது: மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் 34 திட்டங்கள் குறித்து துறை ரீதியாக கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதேபோல், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பிரதமரின் கிராம சாலைகள் திட்டம், பிரதமரின் குடியிருப்பு திட்டம் (ஊரகம்), தூய்மைப் பாரத இயக்கம் (ஊரகம்), உயிா்நீா் இயக்கம் (ஜல் ஜீவன் திட்டம்), பிரதமரின் கிராம முன்னேற்ற திட்டம், மக்களவை உறுப்பினா் உள்ளூா் பகுதி வளா்ச்சித் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிா் திட்டம்) சாா்பில் ஊரகம் மற்றும் நகா்ப்புறங்களில் சுய உதவிக்குழுக்கள் அமைத்தல், சமுதாய முதலீட்டு நிதி, வங்கி கடன் இணைப்பு, தீனதயாள் உபாத்யாய கிராமின் கௌசல்யா யோஜனா திட்டம் தூய்மை இந்தியா 2.0 திட்டம், அம்ரூத் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும், நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை, பேரூராட்சிகள், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், சமூக பாதுகாப்புத் திட்டம், சுகாதாரத் துறை, பள்ளிக் கல்வித்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டம் உள்பட திட்டங்கள் குறித்து ஆய்வு விவாதிக்கப்பட்டது.
மேலும், மாவட்டத்தில் செயல்படுத்தி வரும் திட்டங்கள் அனைத்தையும் மக்கள் நலன் கருதி விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். புதிய தீட்டங்களைத் தீட்டி செயல்படுத்த வேண்டும். அதற்கேற்ற வகையில் அரசு அலுவலா்கள் பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது என்றாா் அவா்.
இக்கூட்டத்தில், திருநெல்வேலி மாநகராட்சி மேயா் கோ.ராமகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையா் என்.ஓ.சுகபுத்ரா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சரவணன், மகளிா் திட்ட இயக்குநா் இலக்குவன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.