தில்லியில் காற்று மாசுபாட்டைக் குறைக்க செயற்கை மழை சோதனை: ஜூலை 4 தொடக்கம்!
விசாரணைக்கு சென்ற இளைஞர் மரணம்; திருப்புவனம் காவல்நிலையத்தில் உறவினர்கள் போராட்டம்.. நடந்தது என்ன?
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரத்தில் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய வருகிறார்கள்.
இக்கோயிலில் தனியார் நிறுவனம் மூலம் அப்பகுதியைச் சேர்ந்த பாலகுரு என்பவரின் மகனான அஜித்குமார் (வயது 27) காவலாளியாக பணிபுரிந்து வந்தார்.
நேற்று முந்தினம் மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த சிவகாமியும் அவர் மகள் நிகிதாவும் கோயிலுக்கு வந்துள்ளனர்.

காரில் வந்த சிவகாமிக்கு நடக்க முடியாததால், காவலாளி அஜித்குமார் சக்கர நாற்காலி எடுத்து வந்து உதவியுள்ளார். அப்போது நிகிதா, காரை ஓரமாக பார்க்கிங் செய்யும்படி அஜித்குமாரிடம் தெரிவிக்க, தனக்கு கார் ஓட்டத்தெரியாது என்று கூறி, அங்கிருந்த வேறொருவரிடம் காரை பார்க்கிங் செய்யச் சொல்லுங்கள் என்று அஜித்குமார் கூறியுள்ளார்.
கோயிலில் வழிபாடு முடிந்து சிவகாமி, நிகிதா ஆகியோர் காரில் ஏறியபோது, பின் சீட்டில் பெட்டியில் வைத்திருந்த 10 பவுன் தங்க நகையை காணவில்லை என்று அதிர்ச்சியடைந்தவர்கள் உடனே அஜித்குமாரிடம் கேட்க, அதுபற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று கூற உடனே திருப்புவனம் போலீஸாரிடம் புகார் தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து அஜித்குமார் உள்ளிட்ட சிலரை பிடித்த போலீசார் திருப்புவனம் காவல்நிலையத்தில் வைத்து விசாரித்துள்ளனர். பின்பு அஜித்குமாரை வெளியே அனுப்ப, தனிப்படை போலீஸார் அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர். அப்போது அஜித்குமாருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, அவரை திருப்புவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தவர்கள் பின்பு மதுரைக்கு கொண்டு சென்று தனியார் மருத்துவமனையில் பரிசோதித்ததில் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இத்தகவல் தெரிந்து அஜித்குமாரின் உறவினர்கள் திருப்புவனம் காவல்நிலையம் முன் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் குறித்து சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உத்தரவில் உயர் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து அஜித்குமாரின் உறவினர்கள் கூறும்போது, "கோயிலில் அஜித்குமார் காரில் வந்த குடும்பத்திற்கு உதவியுள்ளான். இந்நிலையில் நகை காணவில்லை எனக் கூறி அஜித்குமார், அவன் தம்பி உள்பட 5 பேரை போலீசார் பிடித்து கடுமையாக அடித்து விசாரணை செய்துள்ளனர். அடி தாங்கமுடியாமல் அஜித் உயிரை விட்டுள்ளான். போலீஸ் அடித்ததில் உயிரிழந்தவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இந்த சம்பவத்தில் எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்" என்றனர்.
இந்த நிலையில் இதற்கு காரணமான 6 போலீசாரை சிவகங்கை எஸ்.பி சஸ்பெண்ட் செய்யவுள்ளதாக தகவல் பரவி வருகிறது.