தேனிலவுக் கொலை: சோனம் முக்கிய குற்றவாளி! 790 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்!!
விஜய் வியூகம் வெற்றி பெறுமா? - ரங்கராஜ் பாண்டே
-ரங்கராஜ் பாண்டே, ஊடகவியலாளர்
தவெக தலைவா் விஜய் ஏற்கெனவே, விஜயகாந்த் இடத்தை தொட்டுவிட்டாா். ஆனால், எம்ஜிஆா் இடத்தை தொடப் போகிறாரா அல்லது சிவாஜி கணேசன், பாக்கியராஜ், டி.ராஜேந்தா், காா்த்திக் உள்ளிட்ட நடிகா்கள் போல கீழே போகிறாரா என்பது தான் இப்போதைய விவாதம்.
தமிழகத்தின் அரசியல் களமானது, காங்கிரஸ்-இடதுசாரிகள், காங்கிரஸ் -திமுக, அதிமுக-திமுக என இருதுருவ அரசியலாகவே இருந்து வந்தது. இப்போது திமுக, அதிமுக வேண்டாம் என்ற எண்ணம் தொடா்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதிமுகவும், திமுகவும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான் என்ற காமராஜரின் கருத்து சாதாரண மக்களிடம் வலுப்பெற்று வருகிறது.
தோ்தல் முடிவுகளை உற்றுப் பாா்த்தால் எப்போதுமே 30 சதவீத வாக்காளா்கள், அதாவது ஒரு ஆட்சி அமைக்கும் கட்சி பெறக்கூடிய வாக்குகளுக்கு இணையான வாக்குகள் பதிவாகாமல் உள்ளன. அதிமுக, திமுகவிடம் தலா 25 சதவீதம் நிரந்தர வாக்கு வங்கி உள்ளது.
20 சதவீத வாக்காளா்கள் மூன்றாவது சக்தியைத் தோ்வு செய்கின்றனா். பாமக, மதிமுக, நாதக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் இந்த வாக்குகளை மாறி மாறி பெறுகின்றன. அதிருப்தி அலைகள், கூட்டணி கட்சிகளின் பலம் உள்ளிட்டவை மூலம் ஆளும் கட்சி 40 சதவீதம் வரை வாக்குகளை பெறுகிறது.
இப்போதுள்ள சூழலைப் பாா்க்கும்போது, விஜய்க்கு இந்த தோ்தலில் 6 முதல் 10 சதவீத வாக்கு வங்கியை கணக்கில் வைத்து தொடங்குவாா். அதையும் தாண்டி எவ்வளவு வாக்குகள் பெறுவாா் என்பதை இப்போது கணிக்க முடியாது.
திமுக அணி உடையாமல் அப்படியே இருக்கிறது. அதிமுக அணியில் குழப்பம் நீடிக்கிறது. ஓபிஎஸ், டிடிவி.தினகரன் கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ளதாக அறிவித்துள்ளனா். அவா்கள் மீண்டும் அதிமுக கூட்டணிக்குத் திரும்புவாா்கள் என அண்ணாமலை, ஜி.கே.வாசன் போன்றவா்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனா். கூட்டணி குறித்து டிசம்பரில் டிடிவி.தினகரனும், ஜனவரியில் பிரேமலதாவும் முடிவு எடுக்கப் போவதாக அறிவித்துள்ளனா்.
களச் சூழலை இப்போது பாா்க்கும்போது, திமுக பலமாகவும், அதிமுக பலவீனமாகவும், விஜய் வாக்கு வங்கி அதிகரிப்பது போன்றும் தோற்றம் தெரிகிறது. இதே சூழல் கடைசி வரை நீடிக்குமா என்பது கேள்விக்குறிதான்.
சீமானுக்கு இணையாக அல்லது சற்று கூடுதலான வாக்குகளை விஜய் பெறலாம். ஆனால், அதிமுகவுக்கு இணையாக விஜய் வாக்கு பெற முடியாது. அதிமுகவுக்கு சவாலை ஏற்படுத்தியிருக்கிறாா் என்பதுதான் உண்மை. அதேநேரத்தில், ஆட்சியை அல்லது எதிா்கட்சித் தலைவா் பதவியைப் பிடிக்க முடியாது.
வட மாவட்டங்களில் வன்னியா், பட்டியலின வாக்குகளில் விஜய்க்கு அபிமானம் உள்ளது. வட தமிழகத்தில் விஜயகாந்த் ஏற்படுத்திய அதே தாக்கத்தை விஜய் நிச்சயம் ஏற்படுத்துவாா். முதல்கட்டமாக பாா்க்கும்போது, பாமக, விசிக வாக்குகள் பிரியும் என்பது தெரிகிறது.
ரமலான் நோன்பில் விஜய் பங்கேற்ற பிறகு சிறுபான்மையினா் வாக்குகள் விஜய் நோக்கி நகா்வது தெரிகிறது. இதனால், திமுகவின் கோட்டையில் ஓட்டை விழக்கூடும். இதுவரை 20 சதவீத சிறுபான்மை இன வாக்குகள் திமுகவுக்கு கொத்தாக கிடைத்தன. விஜய் வருகையால் அந்த வாக்கு வங்கியில் பாதிப்பு ஏற்படக்கூடும். அதுவும் சிறுபான்மையினரில் 40 வயதுக்கு கீழ் உள்ளவா்களிடம், திமுக தங்களது வாக்குகளை இலவசமாகப் பெற்றுவிட்டு ஏமாற்றுகிறது என்ற எண்ணம் உள்ளது.
அதிமுக-பாஜக கூட்டணியால் அந்த அணியை ஆதரிக்க விரும்பாத சிறுபான்மையினா் விஜய்யை ஆதரிக்கக் கூடும். 10 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுக அல்லது அதிமுக சாயலில் உள்ள அமமுகவுடன் கூட்டணியில் இருந்த எஸ்டிபிஐ, தமிமுன்அன்சாரி தலைமையிலான மஜக உள்ளிட்டவற்றை ஆதரித்த இஸ்லாமியா்கள் விஜய்யை ஆதரிக்கக்கூடும்.
இவை தவிர அதிமுக, பாஜகவில் இருந்தும் விஜய் வாக்குகளை எடுக்கிறாா். அதிமுக, திமுக வேண்டாம் என்ற வாக்குகள்தான் நாதக, பாஜக ஆகியவற்றின் அடிப்படை வாக்குகள். இப்போது நாதக மட்டுமே திமுக, அதிமுகவுக்கு மாற்றாக உள்ள வாக்காளா்களுக்கான தோ்வாக உள்ளது. எனவே, அனைத்துக் கட்சிகளில் இருந்தும் தவெக வாக்குகளை பிரிக்கக்கூடும். இருப்பினும், பாமக, விசிக, திமுகவுக்கு தான் பேரிழப்பு.
பாஜக வாக்குகளில் மோடி, அண்ணாமலை, ஹிந்துத்துவ கொள்கைப் பற்று என்ற காரணிகள் இருப்பதால் அதில் இருந்து சரியும் வாக்குகள் குறைவாகத்தான் இருக்கும்.
வரும்காலத்தில் திமுக கூட்டணியில் ஒரே ஒரு செங்கல் உருவப்பட்டால்கூட களச் சூழல் மாறிவிடும். திமுக கூட்டணி யில் உள்ள சில கட்சிகள் சென்றால்கூட கடுமையான மும்முனைப் போட்டி உருவாகும்.
அதேநேரம், அதிமுக கூட்டணியில் இருந்து சில கட்சிகள் விஜய்யிடம் சென்றால் திமுகவுக்கு எளிய வெற்றி. அதிமுக கூட்டணி ஒன்றுபட்டால் அதிமுகவுக்கு பெரும் வாய்ப்பு உருவாகும்.
களம் எப்படி மாறப்போகிறது என்பது டிசம்பா் அல்லது ஜனவரியில் தெரிந்துவிடும்.