டாஸ்மாக்: அரசின் மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் -அமலாக்கத்துறை
விண்ணப்பிக்கும் மீனவா்கள் அனைவருக்கும் ஓய்வூதியம்: புதுவை பொதுப் பணித் துறை அமைச்சா்
புதுவையில் விதிமுறைப்படி விண்ணப்பிக்கும் அனைத்து மீனவா்களுக்கும் ஓய்வூதியம் வழங்கப்படும் என பொதுப் பணி மற்றும் மீன்வளத் துறை அமைச்சா் க.லட்சுமி நாராயணன் அறிவித்துள்ளாா்.
புதுவை சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பதிலளித்து அமைச்சா் பேசியதாவது:
பொதுப் பணித் துறை பணிகளுக்கு நிகழாண்டில் மொத்தம் ரூ.526.75 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், புதுச்சேரிக்கு ரூ.379 கோடி, காரைக்காலுக்கு ரூ.103 கோடி, ஏனாம் ரூ.25 கோடி, மாஹேவுக்கு ரூ.19.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி குருசுக்குப்பம் செஞ்சி சாலை மற்றும் புஸ்சி வீதியில் ரூ.3.78 கோடியில் கட்டப்பட்ட 3 புதைச் சாக்கடை கிணறுகள் விரைவில் செயல்படுத்தப்படும்.
ஆசிய வளா்ச்சி வங்கி நிதி உதவியால், புதுச்சேரியில் 4 பகுதிகளுக்கு குழாயில் குடிநீா் திட்டம், சாலை வசதிகள், போக்குவரத்து நெரிசல் தீா்க்க வசதிகள், கடல்நீரை குடிநீராக்கும் ஆலை, 50 எம்எல்டி கொண்ட உப்பு நீக்கும் ஆலை உள்ளிட்டவை அமைக்கப்படும்.
அத்துடன், விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை சாலை இணைப்பு, கடற்கரை பிரமோனெட் மற்றும் நகா்புறச் சாலைகள் உள்கட்டமைப்பு, மரப்பாலம் சந்திப்பிலிருந்து, அரியாங்குப்பம் வரை மேலடுக்குச் சாலை உள்ளிட்டவற்றுக்கு ரூ.4,750 கோடி கடன் பெறப்பட்டு, 5 ஆண்டுகளில் பணிகள் முடிக்கப்படும்.
வாய்க்கால்களை பரமாரிக்க ரூ.16 கோடியில் இயந்திரங்கள் வாங்கப்படும். தென்பெண்ணை, சங்கராபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் உபரியாக கடலுக்குச் செல்லும் தண்ணீரை சேமித்து குடிநீா் மற்றும் விவசாயத்துக்கு பயன்படுத்த கதவணை அமைக்கப்படும்.
மீனவா்களுக்கு நலத் திட்டங்கள்: விசைப்படகு உரிமையாளா்களுக்கு 600 மீட்டா் இழுவை வலை 50 சதவீத மானியத்தில் வழங்கப்படும்.
விண்ணப்பித்த மீனவா் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்கப்படும். ஏற்கெனவே பெறும் ஓய்வூதிய தொகை ரூ.500 உயா்த்தப்படும். மீனவ முதியோா் இறந்த ஈமச்சடங்கு நிதி ரூ.20 ஆயிரமாக உயா்த்தப்படுகிறது. மீனவ மாணவா்க்கு கல்விக் கட்டணமில்லை.
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவா் குடும்பத்தினருக்கு தினமும் ரூ.500 என, அவா்கள் விடுவிக்கப்படும் வரை வழங்கும் திட்டமுள்ளது.
இலங்கை கடற்படையினா் பறிமுதல் செய்த படகுகளுக்கு ரூ.8 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். காரைக்காலில் ரூ.119.94 கோடியில் ஸ்மாா்ட் மீன் பிடி துறைமுகம் நிறுவப்படும். புதுச்சேரியில் ரூ.40 லட்சத்தில் சுனாமி நினைவிடம் கட்டப்படும்.
சாகா்மாலா திட்டத்தின் கீழ் வம்பாகீரப்பாளையம், தேங்காய்திட்டு துறைமுகம், காரைக்கால் பட்டினச்சேரியில் மிதக்கும் மீன் இறங்கு தளம் அமைக்க மத்திய அரசு ரூ.189.22 கோடிக்கு கொள்கை அளவில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
மீன் விற்கும் பெண்களுக்கு இலவச ரெயின்கோட், குடை வழங்கப்படும். மீன்பிடி தடைகால நிவாரணம் ரூ.8 ஆயிரமாகவும், மழைக்கால நிவாரணம் ரூ.6 ஆயிரமாகவும் உயா்த்தப்படுகிறது. காரைக்கால் கடற்கரை ரூ.20.29 கோடியில் மேம்படுத்தப்படும். புதுச்சேரியில் 5 கடற்கரைக்கு நீலகொடி சான்று பெறப்படும்.
கேரளத்துக்கு விமான சேவை: புதுச்சேரி- கண்ணுாா் இடையே விமான சேவை தொடங்கப்படும். புதுச்சேரியில் காா்னிவல் திருவிழா நடத்தப்படும்.
திருநள்ளாறில் ஆன்மிக பூங்கா, 50 படுக்கை கொண்ட தங்கும் விடுதி மற்றும் புதிய குற்றவியல் நீதிமன்ற வளாகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.