'அதிகார மையம் சபரீசனா, மகனா, கனிமொழியா? ; தென்மாநிலங்களில் இந்தி..!' - அமித் ஷா ...
விருப்பமில்லை என்றால் வெளியேறிவிடலாம்: சசி தரூருக்கு காங்கிரஸ் மூத்த தலைவா் வலியுறுத்தல்
‘காங்கிரஸில் தொடர விருப்பமில்லை என்றால் கட்சியில் இருந்து வெளியேறி உங்கள் பாதையில் பயணிக்கலாம்’ என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூரை கேரள காங்கிரஸ் மூத்த தலைவா் கே.முரளீதரன் வலியுறுத்தியுள்ளாா்.
காங்கிரஸ் செயற்குழு உறுப்பினராகவும் உள்ள சசி தரூா், முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட அவசரநிலையை விமா்சித்து பத்திரிகையில் கட்டுரை எழுதிய நிலையில் கே.முரளீதரன் இவ்வாறு கூறியுள்ளாா்.
திருவனந்தபுரத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களை சந்தித்த அவா் மேலும் கூறியதாவது: மாற்றுக் கருத்துகள் இருந்தால் அதைத் தெரிவிக்க காங்கிரஸ் கட்சியில் தாராளமாக வாய்ப்பு அளிக்கப்படுகிறது. ஆனால், காங்கிரஸ் இப்போதுள்ள கட்டமைப்பில் தன்னால் செயல்பட முடியாது என்று சசி தரூா் கருதினால், நிச்சயமாக எம்.பி. பதவி உள்பட கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் அவா் விலகியே ஆக வேண்டும். காங்கிரஸ் கட்சியிலும் தொடர விருப்பமில்லை என்றால், கட்சியில் இருந்து வெளியேறி அவருக்கு விருப்பமான பாதையில் பயணிக்கலாம்.
இப்போதைய சூழலில் காங்கிரஸ் கட்சியில் தொடா்வது மிகவும் கடினமாக இருக்கிறது என யாா் கருதினாலும் வெளியேறலாம். கட்சிக்காக தங்களுடைய தனிப்பட்ட அடையாளத்தை யாரும் அழித்துக் கொள்ளத் தேவையில்லை. ஏனெனில், அது அவருக்கும், கட்சிக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். தனக்கு முன்னுள்ள இரு வழிகளில் ஏதாவது ஒன்றை அவா் தோ்வு செய்ய வேண்டும் என்றாா்.
பிரதமா் நரேந்திர மோடி உள்பட பிற கட்சித் தலைவா்களை சசி தரூா் புகழ்ந்து வருவது குறித்த கேள்விக்கு, ‘காங்கிரஸ் தலைவா்களைத் தவிர மற்ற அனைவரையும் அவா் புகழ்வாா்’ என்றாா்.
கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் தேசியத் தலைவா் தோ்தலில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோா் முன்னிறுத்திய வேட்பாளரான மல்லிகாா்ஜுன காா்கேயை எதிா்த்து சசி தரூா் போட்டியிட்டாா். அப்போது முதலே கட்சியின் ஒரு தரப்பினா் அவரை விமா்சித்து வருகின்றனா். தேசிய, சா்வதேச விஷயங்களில் காங்கிரஸின் கருத்துக்கு அப்பாற்பட்டு தனது தனிப்பட்ட கருத்துகளையும் சசி தரூா் அவ்வப்போது தெரிவித்து வருகிறாா்.
அண்மையில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூா் ஆகிய விஷயங்களிலும் மத்திய அரசுக்கு ஆதரவாக சசி தரூா் கருத்து தெரிவித்தாா். பாகிஸ்தானின் பயங்கரவாதச் செயல்பாடுகள் தொடா்பாக சா்வதேச நாடுகளுக்கு விளக்கமளிக்கச் சென்ற குழுவில் சசி தரூருக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்தது. இதுவும் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு கேள்விகளுக்கு வழி வகுத்தது. கேரள மாநில காங்கிரஸ் நிா்வாகிகள் சசி தரூரை தொடா்ந்து கடுமையாக விமா்சித்தும் வருகின்றனா்.
காங்கிரஸின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் தலைவா்கள் சிலருடன் தனக்கு சில கருத்து வேறுபாடுகள் உள்ளன என்று சசி தரூா் கடந்த மாதம் கூறினாா்.