'விரைவில் சந்திப்போம்' - மாணவ, மாணவியருக்கு விஜய் வாழ்த்து!
பொதுத்தேர்வு தேர்ச்சி மட்டுமே வாழ்வின் எல்லாவற்றையும் முடிவு செய்திடாது என்று பிளஸ் 2 மாணவர்களுக்கு தவெக தலைவர் விஜய் அறிவுரை வழங்கியுள்ளார்.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று(வியாழக்கிழமை) வெளியாகியுள்ளன. சென்னை கோட்டூா்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் முடிவுகளை வெளியிட்டார்.
இதில் மாணவிகள் 96.70 சதவிகிதமும், மாணவர்கள் 93.16 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதத்தில் அரியலூர்(98.82%), ஈரோடு (97.98%), திருப்பூர்(97.53%) ஆகிய மாவட்டங்கள் முறையே முதல் 3 இடங்களைப் பெற்றுள்ளன.
வெற்றி பெற்றவர்களுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில்,
"12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ள தம்பி, தங்கைகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பொதுத்தேர்வு தேர்ச்சி மட்டுமே வாழ்வின் எல்லாவற்றையும் முடிவு செய்திடாது என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். எனவே, மனம் தளராமல் கடின உழைப்பை மீண்டும் முதலீடாக்கி, புதிய இலக்கை நோக்கிச் செல்ல அனைவருமே தயார் ஆகுங்கள். வெற்றி காணுங்கள்.
வாழ்வின் அடுத்த நிலைக்குச் செல்லும் நீங்கள், தேர்ந்தெடுக்கும் துறைகளில் பற்பல சாதனைகள் புரிந்து, தலைசிறந்து விளங்கிட வாழ்த்துகிறேன்.
விரைவில் சந்திப்போம். வெற்றி நிச்சயம்" என்று பதிவிட்டுள்ளார்.
— TVK Vijay (@TVKVijayHQ) May 8, 2025
இதையும் படிக்க | பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு: முழு விவரம்!