சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் டாப் 5 தனிநபர் அதிகபட்ச ஸ்கோர்கள்!
வெளியே வந்த பூனை: குடியரசு துணைத்தலைவர் பேச்சுக்கு கனிமொழி எம்.பி. பதில்!
மும்மொழிக் கொள்கை விவகாரத்துக்கு இடையே குடியரசு துணைத்தலைவர் பேசியதற்கு கனிமொழி எம்.பி. பதிலளித்தது சமூக ஊடகங்களில் பேசுபொருளாகி உள்ளது.
தேசிய கல்விக் கொள்கை குறித்து தமிழகத்தில் சமீபகாலமாக அரசியல் கட்சிகளிடையே பெரும் வாக்குவாதம் நிகழ்ந்து வரும்நிலையில், ``ஒரு நிலத்தை கைப்பற்றுவதற்கு அதன் மொழியை அழிப்பதே சிறந்த வழி’’ என்று குடியரசுத் துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜக்தீப் தன்கர் பேசியதைக் குறிப்பிட்டு, திமுக எம்.பி. கனிமொழி ``பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது’’ என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் ஹிந்தித் திணிப்பை தொடர்ந்து மேற்கொண்டு வரும் பாஜகவுக்கு எதிராக எம்.பி. கனிமொழி பதிவிட்டிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
மராத்தி மொழிக்கு மத்திய அரசு செம்மொழி அந்தஸ்து வழங்கியதைக் கொண்டாடும் வகையில், தில்லியில் 98 ஆவது அகில இந்திய மராத்திய இலக்கிய மாநாடு வியாழக்கிழமை தொடங்கி 2 நாள்கள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் மற்றும் அவரது மகளும் எம்.பி.யுமான சுப்ரியா சுலேவும் கலந்து கொண்டனர்.
பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது! https://t.co/j1AXmvnLYO
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) February 21, 2025
நிகழ்ச்சியில் ஜக்தீப் தன்கர் பேசியதாவது, ``ஒரு நாடானது அதன் கலாசாரம் மற்றும் அதன் கலாசார நெறிமுறைகளால் வரையறுக்கப்படுகிறது. கலாசாரத்தில் இந்தியா தனித்துவமானது. இதில், உலகில் எந்தவொரு நாடுடனும் இந்தியாவை ஒப்பிட முடியாது. ஒரு மாநிலத்தைக் கைப்பற்றுவதற்கான சிறந்த வழி, அதை உடல்ரீதியாக முறியடிப்பது அல்ல.
மாறாக, அதன் கலாசாரத்தை பின்னுக்குத் தள்ளி, அதன் மொழியை அழிப்பதுமே சிறந்த வழி. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்குள் படையெடுத்தவர்கள், நம்முடைய வழிபாட்டுத் தலங்களை அழித்துவிட்டு, அதன்மேல் அவர்களது வழிபாட்டுத் தலங்களைக் கட்டி எழுப்பி, நம் மொழி, கலாச்சாரம், மத தலங்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டனர்.
அவர்கள் நம் மொழிக்காக நம் கலாசாரத்திற்காக நம் மத இடத்திற்காக மிகவும் கொடூரமான அடக்குமுறைகளை கையாண்டு, நம்மைக் காயப்படுத்த நம் மத இடத்திற்கு மேலாக அவர்களின் இடத்தை உருவாக்கினர்’’ என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க:மொழியை வைத்து பிரிவினைகளை உருவாக்கும் முயற்சியை கைவிடுங்கள்! -பிரதமர் மோடி