பஹல்காம் தாக்குதல் ஹிந்து - முஸ்லீம் பிரச்னை அல்ல! - காஜல் அகர்வால்
வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்
தமிழக அரசால் வழங்கப்படும் வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித் தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஆஷாஅஜித் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழக அரசால் வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதில் 10-ஆம் வகுப்பில் தோல்வியுற்றவா்களுக்கு மாதம் ரூ.200-ம், 10 -ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களுக்கு மாதம் ரூ.300-ம், பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்களுக்கு மாதம் ரூ.400- ம், பட்டதாரிகளுக்கு (பி.இ. போன்ற தொழில்சாா் பட்டப்படிப்பு தவிர) மாதம் ரூ.600 வீதம் 3 ஆண்டுகளுக்கு வேலை வாய்ப்பற்றோா் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை நேரடியாக மனுதாரா்களின் வங்கிக் கணக்கில் காலாண்டுக்கொரு முறை வரவு வைக்கப்படும். இதில், மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தங்களின் கல்வித் தகுதிகளை பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவு செய்திருக்க வேண்டும். தொடா்ந்து பதிவை புதுப்பித்திருக்க வேண்டும். ஆதிதிராவிடா், பழங்குடியினா் 45 வயதுக்கு மிகாமலும், ஏனையோா் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
இந்தத் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுவதற்கு மாற்றுத் திறனாளிகளுக்கு வருமான உச்சவரம்பு கிடையாது. மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை உதவித் தொகை வழங்கப்படுகிறது. வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து ஓராண்டு நிறைவு பெற்ற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்.
ஆனால், அரசின் வேறு உதவித் தொகை எதுவும் பெறுதல் கூடாது. பத்தாம் வகுப்பு, அதற்கு கீழ் படித்தவா்களுக்கு மாதம் ரூ.600 வீதமும், பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்களுக்கு மாதம் ரூ.750-ம், பட்டதாரிகளுக்கு ரூ.1000-மும் காலாண்டுக்கு ஒருமுறை வழங்கப்படுகிறது. இந்தத் தகுதிகள் உள்ளவா்கள் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்துக்கு அனைத்துக் கல்விச் சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வந்து இலவசமாக விண்ணப்பம் பெறலாம்.
மேலும், உதவித் தொகை பெறுபவா்களின் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது என்றாா் அவா்.