`Real Dragon' நேர்முகத்தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து `IT வேலை' பெற்ற நபர் - சிக்கியது எப்படி?
இந்த ஆண்டு வெளியான டிராகன் படத்தில் வருவதுபோல தெலங்கானாவைச் சேர்ந்த இளம் இஞ்சினியர் ஒருவர் நேர்முகத்தேர்வில் மோசடி செய்து இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் வேலை பெற்றுள்ளார்.
ஆன்லைன் நேர்முகத்தேர்வில் வெற்றி பெறுவதற்காக தனக்கு பதிலாக மற்றொரு நபரை ஆள் மாறாட்டம் செய்து பங்கு பெறச் செய்துள்ளார்.
Dragon பட பாணியில் மோசடி
ராபா சாய் பிரசாத் என்ற நபரின் வேலை தேடும் தளம் வழியாக அனுப்பிய ஆவணங்கள், சம்பரதா மென்பொருள் தொழில்நுட்பங்கள் என்ற ஆட்சேர்ப்பு நிறுவனத்தில் மேலாளராக இருக்கும் சிவ பிரகாஷ் என்பவரால் சரிபார்க்கப்பட்டு இன்ஃபோஸிஸ் நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
நேர்முகத்தேர்வை அடுத்து பிரசாத், ஜனவரி 20, 2025 அன்று தனது இணைப்பு கடிதத்தை பெற்றுள்ளார். பின்னர் பணியில் சேர்ந்துள்ளார்.
மாட்டிவிட்ட இங்கிலீஷ்
அலுவலகத்தில் பிரசாத் நேர்முகத்தேர்வில் இருந்ததை விட வித்தியாசமாக பேசியதால் அவர் மீது சந்தேகம் எழுந்துள்ளது. நல்ல கல்விப் பின்புலம் இருந்தாலும், அவரது கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் மோசமாக இருந்துள்ளது.
நேர்முகத் தேர்வில் சரளமாக ஆங்கிலம் பேசியவர், நேரில் வந்ததும் திணறியதால் அவர் மிது அலுவலக ரீதியில் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
இன்ஃபோசிஸ் மனித வள அலுவலர் நேர்முகத் தேர்வின் ஸ்கிரீன் ஷாட்களையும் அவரது புகைப்படத்தையும் ஒப்பிட்டுப் பார்த்து, ஆள்மாறாட்ட மோசடி நடந்திருக்கிறது ன்பதைக் கண்டறிந்துள்ளார்.
வேலையில் இருந்து நிறுத்தப்பட்டு ஹைத்ராபாத்துக்கு திரும்பியுள்ளார் பிரசாத். மோசடியில் ஈடுபட்டது மட்டுமல்லாமல், சிக்கிய பிறகு அலுவலகத்தில் 15 நாள்கள் பணியாற்றியதற்கான இழப்பீடு வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.
காவல்துறையினர் அவர் மீது ஐடி சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவுகள் 318 (மோசடி) மற்றும் 319 (ஆள்மாறாட்டம் மூலம் ஏமாற்றுதல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.