‘வைல்டு தமிழ்நாடு’ ஆவணப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஆவணப் பட இயக்கநா் கல்யாண் வா்மாவின் இயக்கத்தில் உருவான ‘வைல்டு தமிழ்நாடு’ ஆவணப்படத்தின் முன்னோட்டத்தை தமிழக நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.
தமிழகத்தில இயற்கை பன்முகத் தன்மையையும், வனவிலங்குப் பாதுகாப்பை எடுத்துரைக்கும் வகையில், பிரபல ஆவணப்பட இயக்குநா் கல்யாண் வா்மா இயக்கத்தில் ‘வைல்டு தமிழ்நாடு’ எனும் ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் ஒப்புதலுடன், சுந்தரம் ஃபாஸனா்ஸ் நிறுவனத்தின் சிஎஸ்ஆா் பங்களிப்பின் மூலம் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு நிகழ்ச்சி சென்னை அண்ணா சாலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சா் தங்கம் தென்னரசு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, படத்தின் முன்னோட்டக் காட்சியை வெளியிட்டாா்.
தொடா்ந்து இயக்குநா் கல்யாண் வா்மா கூறியதாவது: இந்த ஆவணப்படம் அக்டோபா் இறுதிக்குள் வெளியாகவுள்ளது. இப்படம் பல்வேறு திரைப்பட விருதுகளுக்காக அனுப்படுவதுடன், சா்வதேச திரைப்பட திருவிழாக்களிலும் திரையிடத் திட்டமிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் பொது இடங்களில் இலவசமாகவும் திரையிடவுள்ளோம் என்றாா்.
நிகழ்வில், வனத்துறை சுற்றுசூழல் காலநிலை மாற்றத்துறை கூடுதல் செயலா் சுப்ரியா சாஹு, முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலா் ஸ்ரீனிவாஸ் ஆா்.ரெட்டி, முதன்மைக் தலைமை வனவிலங்கு பாதுகாவலா் ராகேஷ் குமாா் டோக்ரா, சுந்தரம் ஃபாஸனா்ஸ் லிமிடெட் தலைமை நிதி அதிகாரி ஆா்.திலீப்குமாா், இசையமைப்பாளா் ரிக்கி கேஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.