ஷில்பா ஷெட்டி, ஜாக்குலின், கெளரி கான்..! - ரெஸ்டாரன்ட் தொழிலில் முதலீடு செய்யும் பாலிவுட் பிரபலங்கள்
மும்பையில் பாலிவுட் நட்சத்திரங்கள் தாங்கள் நடித்து சம்பாதிக்கும் பணத்தை ரியல் எஸ்டேட் மற்றும் ரெஸ்டாரன்ட்களில் அதிக அளவில் முதலீடு செய்து வருகின்றனர். நடிகர் அமிதாப்பச்சனும், அவரது மகன் அபிஷேக் பச்சனும் பெரிய அளவில் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்துள்ளனர். மும்பை மட்டுமல்லாது உத்தரப்பிரதேசத்தில் உள்ள அயோத்தியிலும் ரியல் எஸ்டேட்டில் அமிதாப்பச்சன் பெரிய அளவில் முதலீடு செய்து வருகிறார்.
ஷாருக்கான் ஏற்கனவே பல தொழில்களில் முதலீடு செய்துள்ள நிலையில், இப்போது அவரது மனைவி கெளரி கான் சொந்தமாக மும்பையில் ரெஸ்டாரன்ட் ஒன்றையும் நடத்தி வருகிறார். தோரி என்ற அந்த ரெஸ்டாரன்ட் ஷாருக்கான் வசிக்கும் பாந்த்ரா பகுதியில் செயல்படுகிறது. இந்த ரெஸ்டாரன்டிற்கு ஷாருக்கான் அடிக்கடி தனது குடும்பத்தோடு வந்து செல்வது வழக்கம். ஆனால் அவர்கள் வந்து செல்ல தனியாக ஒரு ரகசிய வாசல் இருக்கிறது.

அந்த ரகசிய வாசல் வழியாகத்தான் ஷாருக்கானும், அவரது குடும்பத்தினரும் வந்து செல்வது வழக்கம். இது குறித்து தோரி ரெஸ்டாரண்டில் தலைமை சமையல்காரராக இருக்கும் ஸ்டீபான் கூறுகையில், ''உணவகத்தில் ரகசிய வாசல் ஒன்று இருக்கிறது. அதனை அனைவரும் பயன்படுத்த முடியாது. கான் குடும்பத்தினர் மட்டும் பயன்படுத்துவர். ஷாருக்கானின் இளைய மகன் ஆப்ராம் அடிக்கடி உணவை ஆர்டர் செய்து சாப்பிடுவார். ஆனால் ஷாருக்கானின் மூத்த மகன் ஆர்யன் கான், மகள் சுஹானா ஆகியோர் நண்பர்களுடன் உணவகத்திற்கு வருவதுண்டு. ஷாருக்கான் பெரும்பாலும் குடும்பத்தோடுதான் வருவார். ஒரு முறை ஷாருக்கானின் மேலாளர் பூஜாவின் பிறந்தநாளை இங்கு கொண்டாடினர்.

பாலிவுட் தயாரிப்பாளரும், இயக்குனருமான கரண் ஜோகர் தென்மும்பையில் நியுமா என்ற பெயரில் ஒரு ரெஸ்டாரன்ட் நடத்தி வருகிறார். பாந்த்ராவில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பாலி தாய் என்ற பெயரில் ஒரு ரெஸ்டாரன்ட் நடத்தி வருகிறார். இது தவிர கொலாபாவிலும் ஒரு ரெஸ்டாரன்ட் நடத்திக்கொண்டிருக்கிறார். நடிகை ஆயிஷா தகியா தனது கணவர் பர்ஹான் ஆஸ்மியுடன் இணைந்து கேப் பாஸிலிகோ என்ற பெயரில் ரெஸ்டாரண்ட் நடத்தி வருகிறார். நடிகை ஷில்பா ஷெட்டி பாஸ்டியன் என்ற பெயரில் நடத்தப்பட்டு வரும் ரெஸ்டாரண்டில் 50 சதவீத பங்குதாரராக இருக்கிறார்.
சம்பிளேஸ் என்ற பெயரில் நடிகர் பாபி தியோல் நடத்தி வரும் உணவகம் பாலிவுட் பிரபலங்கள் மத்தியில் மிகவும் பிரபலம். இது அந்தேரியில் இருக்கிறது. நடிகர் பாட்ஷா மும்பையில் டிராகன் பிளே என்ற பெயரில் ரெஸ்டாரன்ட் நடத்தி வருகிறார். தி குட்வைப் என்ற பெயரில் நடிகை தியா மிர்சா தனது கணவரோடு சேர்ந்து உணவகம் நடத்தி வருகிறார். இது தவிர மெளனி ரானி, ரோஹித் பால், சுனில் ஷெட்டி, சுன்கி பாண்டே என மொத்தம் 15க்கும் அதிகமான பாலிவுட் பிரபலங்கள் மும்பையில் ரெஸ்டாரன்ட் மூலமும் சம்பாதித்து வருகின்றனர். நடிகை மலைகா அரோரா தனது மகனுடன் சேர்ந்து ஸ்கார்லெட் ஹவுஸ் என்ற பெயரில் பாந்த்ராவில் ரெஸ்டாரன்ட் நடத்தி வருகிறார்.

மும்பை கார்ரோடு பகுதியில் இருக்கும் ஆலிவ் பார் அண்ட் கிச்சன் பாலிவுட் பிரபலங்களின் விருப்பமான ரெஸ்டாரன்டாக இருக்கிறது. இங்கு ஷாருக்கான், சைஃப் அலிகான், சாரா அலிகான், பிரியங்கா சோப்ரா என அனைவரும் வருவது வழக்கம். பாந்த்ரா மற்றும் கார்ரோடு பகுதியில் தான் அதிக அளவில் பாலிவுட் பிரபலங்கள் வசித்து வருகின்றனர். எனவே பெரும்பாலான ஆடம்பர ரெஸ்டாரன்ட், நைட்கிளப் போன்றவை இப்பகுதியில் இருக்கிறது. கிரிக்கெட் வீரர்களும் ரெஸ்டாரன்டில் முதலீடு செய்துள்ளனர். விராட் கோலி தனது மனைவி அனுஷ்காவுடன் சேர்ந்து ரெஸ்டாரண்ட் ஒன்றை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.