அமெரிக்கா: ரூ.19 ஆயிரம் கோடி விமானம்; நிலத்தை ஊடுருவும் குண்டு - ஈரானை தாக்கிய ந...
10 மாதங்களில் முடிந்துவிடுவேன் என்றார்கள், 10 ஆண்டுகளாக விளையாடுகிறேன்: பும்ரா
இந்திய அணிக்காக 10 ஆண்டுகளாக விளையாடுவது குறித்து வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மனம் திறந்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 471 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் 465 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதன் மூலம், இந்திய அணி 6 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்திய அணி தற்போது அதன் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.
முதல் இன்னிங்ஸில் இந்தியா தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். டெஸ்ட் போட்டிகளில் இது அவரது 14-வது ஐந்து விக்கெட்டுகள் ஆகும். மேலும், சேனா நாடுகளில் (தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா) அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.
மனம் திறந்த ஜஸ்பிரித் பும்ரா
உலகின் சிறந்த பந்துவீச்சாளராக பும்ரா வலம் வரும் நிலையில், 8-லிருந்து 10 மாதங்களுக்குள் பும்ராவின் கிரிக்கெட் பயணம் முடிந்துவிடும் என அவரது விமர்சகர்கள் எதிர்பார்த்ததாகவும், ஆனால், அவருடைய தன்னம்பிக்கை சர்வதேச கிரிக்கெட்டில் 10 ஆண்டுகளாக அவரை விளையாட வைத்துள்ளதாகவும் ஜஸ்பிரித் பும்ரா மனம் திறந்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: என்னுடைய இத்தனை ஆண்டுகள் கிரிக்கெட் பயணத்தில் பலரும் நான் 8 மாதங்கள் அல்லது 10 மாதங்கள் மட்டுமே விளையாடுவேன் எனக் கூறினார்கள். ஆனால், நான் 10 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வருகிறேன். 12 -13 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறேன். எனக்கு காயம் ஏற்படும்போது, பும்ரா அவ்வளவுதான் அவர் அணியில் இருக்கமாட்டார் எனக் கூறுவார்கள். அவர்கள் அப்படியே கூறிக் கொண்டிருக்கட்டும், நான் என்னுடைய வேலையை செய்கிறேன். ஒவ்வொரு 4 மாதத்துக்கும் இதுபோன்ற விஷயங்கள் நடைபெறும். ஆனால், எத்தனை ஆண்டுகள் நான் விளையாட வேண்டும் என எல்லாம் வல்ல இறைவன் விரும்புகிறாரோ அதுவரை நான் விளையாடுவேன்.
என்னைப் பற்றி மற்றவர்கள் என்ன கூறவேண்டும் என்பது என்னுடைய கட்டுப்பாட்டில் இல்லை. என்னைப் பற்றி இப்படி எழுதாதீர்கள் என அவர்களுக்கு நான் அறிவுரை கூற முடியாது. என்னுடைய பெயரை தலைப்புச் செய்தியாக்கி அவர்கள் வாசகர்களைக் கவர்கிறார்கள். ஆனால், அதில் எனக்கு எந்த ஒரு கவலையும் இல்லை என்றார்.
இதையும் படிக்க: பும்ராவின் பந்துவீச்சை எதிர்கொள்வது மிகவும் கடினம்: பென் டக்கெட்