தமிழா்களுக்காக ஒதுக்கப்பட்ட நரேலா பகுதி குடியிருப்புகளின் நிலை என்ன?
அமெரிக்கா: ரூ.19 ஆயிரம் கோடி விமானம்; நிலத்தை ஊடுருவும் குண்டு - ஈரானை தாக்கிய நவீன ஆயுதங்கள்!
ஈரானின் அணுசக்தி மையங்கள் மீதான அமெரிக்காவின் தாக்குதல் உலகின் அரசியல், பொருளாதார சூழலில் புதிய சூறாவளியை உருவாக்கியிருக்கிறது.
இந்த தாக்குதல் உலக நாடுகளால் கவனிக்கப்பட ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது அமெரிக்கா பயன்படுத்திய உயர் ரக ஆயுதங்கள் மற்றும் போர் கருவிகள்.
ஒருநாட்டிடம் என்னென்ன போர் கருவிகள், விமானங்கள், குண்டுகள் இருக்கின்றன என்பதை பிற நாடுகள் அறிந்திருந்தாலும், அதன் திறனை, களத்தில் பயன்படுத்தும் தந்திரத்தை கணிப்பது இயலாத ஒன்று.
ஈரான் மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா பயன்படுத்திய பயங்கர ஆயுதமான GBU-57 பங்கர் பஸ்டர், டோமாஹாக் (Tomahawk) கப்பல் ஏவுகணைகள் உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியிருக்கின்றன.
இந்த ஆயுதங்கள் ஈரானின் ஃபோர்டோவ், நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய மூன்று அணு சக்தி மையங்களை முற்றிலுமாக அழித்ததாக அறிவித்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப். ஆனால் தங்களுக்கு பெரிய அளவிலான பாதிப்பு ஏற்படவில்லை என்றது ஈரான் தரப்பு.
இருப்பினும் எல்லைக்குள் வந்து தாக்குதல் நடத்தியுள்ள அமெரிக்காவுக்கு தெஹ்ரான் என்ன பதிலடி கொடுக்கும் என்பதையே அனைவரும் உற்றுநோக்கி வருகின்றனர். ஏனெனில் குறைவான பாதிப்பானாலும் அரசு பதிலடி கொடுக்கவில்லை என்றால் மக்கள் ஆதரவை இழக்க நேரிடும்.
அமெரிக்கா பயன்படுத்தியதாக பேசப்படும் ஆயுதங்கள் என்ன அவற்றின் திறன் என்ன என்பதைப் பார்க்கலாம்.
B-2 ஸ்பிரிட் ஸ்டெல்த் பாம்பர்ஸ் (B-2 Spirit Stealth Bombers)
அமெரிக்காவின் ஆயுத கிடங்கில் உள்ள நவீன விமானங்களில் B-2 ஸ்பிரிட் ஸ்டெல்த் பாம்பர்ஸ் மிகவும் தந்திரமாக பயன்படுத்தக் கூடியது. 6 B-2 விமானங்கள் இந்த ஆபரேஷனில் களமிறக்கப்பட்டுள்ளது.
69 அடி நீளம், 172 அடி இறக்கைகள் நீளம், 17 அடி உயரம் கொண்ட இந்த விமானங்கள், மொத்தமே 21 மட்டுமே தயாரிக்கப்பட்டன. இதை தயாரித்த நார்த்ரோப் க்ரூம்மன் கார்ப்பரேஷன் (Northrop Grumman Corporation) நிறுவனம் கூட வேறு நாடுகளுக்கு விற்பது தடை செய்யப்பட்டுள்ளது.
இது நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பாதுகாப்பு அமைப்புகளைக் கடந்து, இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் பெற்றுள்ளது.
ஸ்டெல்த் என்ற வார்த்தைக்கு எளிதில் கண்ணுக்கு சிக்காத அல்லது திருட்டுத்தனமான என்று அர்த்தம். இவற்றை ரேடாரில் எளிதாக கண்டுபிடிக்க முடியாது. இதன் சுடுதல் திறனும் அதிகம்.
அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட ஆயுதங்களிலேயே இதுதான் விலை மதிப்பு மிக்கது. இதன் மதிப்பு 2.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இந்திய மதிப்பில் சுமார் 19 அயிரம் கோடி ரூபாய்.
GBU-57 பங்கர் பஸ்டர் (GBU-57 Bunker Busters)
இந்த வெடிகுண்டுகளைப் பயன்படுத்தியதாக ட்ரம்ப் வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்றாலும், B-2 பாம்பர்ஸ் ஃபோர்டோவ் அணுசக்தி தளத்தைத் தாக்க அதீத சக்தி வாய்ந்த ஒன்றைப் பயன்படுத்தியிருக்க வேண்டும் என்கின்றனர்.
அதன்படி 13,600 கிலோ எடையுள்ள GBU-57 குண்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கும் என்கின்றனர். இது வெடிக்கும் முன்னர் தரைக்குள் 200 மீ ஊடுருவிச் செல்லும் தன்மை கொண்டது. இதனால் பங்கரில் ஒளிந்திருப்பவர்கள் கூட இதனிடம் தப்பிக்க முடியாது. ஈரான் போன்ற நாடுகளில் பங்கர்களே ராணுவ தந்திரங்களில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
Here is a good video explaining how the GBU-57 bunker buster works. pic.twitter.com/L9rc1CmSyS
— Paratrooper Brady™ (@ParatooperBrady) June 22, 2025
இது 20 அடி நீளமும் 2.6 அடி விட்டமும் கொண்டது. விமானப்படை ஆராய்ச்சி ஆய்வகத்தின் வெடிமருந்து இயக்குநரகம் இதனை உருவாக்கியுள்ளது. போயிங் நிறுவனம் இதன் வடிவமைப்பு மேம்பாடு மற்றும் சோதனைகளை மேற்கொண்டுள்ளது.
இந்த ஊடுருவிச் செல்லும் தன்மைதான் இதனை மற்ற குண்டுகள், ஏவுகணைகளிடமிருந்து வேறுபடுத்துகிறது. பூமிக்குள்ளிருந்து வெடிக்கும்போது இது ஏற்படுத்தும் பாதிப்பு பல மடங்காகும். ஈரான் மீதான தாக்குதலில் 12 GBU-57 பங்கர் பஸ்டர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டோமாஹாக் (Tomahawk) கப்பல் ஏவுகணைகள்
அமெரிக்க நீர்மூழ்கி கப்பல்கள் 30 டோமாஹாக் ஏவுகணைகளை பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இவை கடலில் இருந்து நிலத்துக்குள் தூரமாக உள்ள இலக்குகளை அழிக்கப் பயன்படுகிறது.
இதன் சிறப்பம்சம் என்னவென்றால் இவை ஏவப்பட்ட பிறகு செயற்கை கோள் தொடர்பு மூலம் இலக்கை மாற்ற முடியும்.
தண்ணீருக்குள் இருப்பவரை தேனீக்கள் சுற்றுவதுபோல போல ஒரு இலக்கின் மேலே சுற்ற வைத்து துல்லியமான நேரத்தில் தந்திரமான முறையில் தாக்குதல் நடத்த முடியும். போர் களத்தில் உள்ள சேதங்கள் குறித்த தகவல்களையும் இதன்மூலம் பெற முடியும்.
1991ம் ஆண்டு ஈராக்குக்கு எதிரான ஆபரேஷன் டெசர்ட் ஸ்டோர்ம் ராணுவ நடவடிக்கையில் இது முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது. அதன்பிறகு மத்திய கிழக்கு நாடுகளான லிபியா, சிரியா ஆகிய நாடுகளை இது தாக்கியிருக்கிறது. இதனால் 2,500 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இலக்கைக் கூட சரியாக தாக்க முடியும் என்கின்றனர்.
F-22 ராப்டர் மற்றும் F-35A லைட்னிங் II (F-22 Raptor and F-35A Lightning II)
இந்த இரண்டு விமானங்ளும் ஆப்பரேஷன் மிட் நைட் ஹேமரின்போது வானில் அமெரிக்க ராணுவத்தின் ஆதிக்கத்தை தக்கவைக்க பயன்பட்டதாக விமானப்படைத் தெரிவித்துள்ளது.

அதிவேகமான இந்த விமானங்கள் 'ஸ்டெல்த்' திறனும் பெற்றுள்ளன. இவற்றைத் தந்திரமாக செயல்படுத்த முடியுமென்றும், நீண்ட தூரம் கடந்து தாக்க முடியுமென்று கூறுகின்றனர்.
F-35 லைட்னிங் II விமானங்கள் பற்றி விரிவாக இங்கே பார்க்கலாம்...