கர்ப்பிணிக்கு காலாவதி குளுக்கோஸ் விநியோகம்; அரசு மருத்துவமனை முற்றுகை - திருப்பூ...
141 கல்லூரிகளுக்கு நோட்டீஸ்? - `குளறுபடியான அறிவிப்புகள்; ஏமாற்றும் செயல்’ - அண்ணா பல்கலை., சர்ச்சை
தமிழகத்தில் அண்ணா பல்கலையின் கீழ் நூற்றுக்கணக்கான அரசு, தனியார் பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. இங்குள்ள 2 லட்சத்திற்கும் மேற்பட்ட இடங்கள் கலந்தாய்வின் மூலம் நிரப்பப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான கலந்தாய்வு கடந்த 7.7.2025 அன்று தொடங்கியது. மூன்று சுற்றுக்களாக நடக்கும் இந்த கலந்தாய்வு வரும் 26.8.2025 அன்று நிறைவடைகிறது. இந்தச்சூழலில், அண்ணா பல்கலை, 'ஆசிரியர் பற்றாக்குறை, ஆய்வக உபகரணங்கள் இல்லாதது என பல்வேறு குறைபாடுகள் இருக்கிறது. அதை 45 நாட்களுக்குள் சரி செய்ய வேண்டும்' என 141 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

அதாவது அகில இந்தியத் தொழில்நுட்ப கவுன்சில், அண்ணா பல்கலையில் அங்கீகாரம் பெற்ற அனைத்து நிறுவனங்களும் ஆண்டுதோறும் அதைப் புதுப்பிக்க வேண்டும். அதன்படி இந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகள் புதுப்பிப்பதற்காக விண்ணப்பித்தன. அதுகுறித்து அண்ணா பல்கலை ஆய்வு மேற்கொண்டது. அப்போதுதான் 141 பொறியியல் கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை, ஆய்வக குறைபாடு என பல்வேறு பிரச்னைகள் இருப்பது தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்துதான் அந்த கல்லூரிகளுக்கு 45 நாட்களில் குறைகளைச் சரி செய்ய வேண்டும் அல்லது ஒழுங்கு நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. ஆனால் அதில்தான் சர்ச்சையும் வெடித்திருக்கிறது!
இதுகுறித்து நம்மிடம் பேசிய அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், "இந்த ஆண்டுக்கான பொறியியல் கலந்தாய்வு 14.07.2025 துவங்கி 26.08.2025 அன்று நிறைவடைகிறது. 43 நாட்கள் நடைபெறுகிறது கலந்தாய்வுக்குப் பிறகு பொறியியல் கல்லூரிகளின் முதல் ஆண்டு பிரிவு செயல்படத் துவங்கும். இதற்கிடையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு 2025-26ம் ஆண்டுக்கான இணைவு அங்கீகார ஆய்வு சமீபத்தில் நிறைவுற்றது. அதில் சுமார் 141 பொறியியல் கல்லூரிகளுக்குக் குறைபாடுகள் இருப்பதாகவும் அதைச் சரி செய்ய 45 நாட்கள் அண்ணா பல்கலைக்கழகம் கெடு விதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக சுமார் 400 தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலை குறைபாடுகளைச் சரி செய்ய மின் அஞ்சல் அனுப்பியுள்ளது எனக் கூறப்பட்டது. தற்போது 141 கல்லூரி என்கிறார்கள். இது போன்ற குளறுபடியான அறிவிப்புகள் மாணவர்களையும், பெற்றோர்களையும் முழுவதுமாக ஏமாற்றும் செயல். சம்மந்தப்பட்ட தனியார் கல்லூரிகளின் குறைபாடுகள் மற்றும் அவற்றின் மோசமான தற்போதைய நிலவரம் பற்றி அண்ணா பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு முன்பே தெரிந்திருக்கும். பொறியியல் கல்லூரிகள் குறைகளைச் சரி செய்ய ஏற்கனவே அறிவுரை மற்றும் அறிவிப்பு வழங்கிய நிலையில் மீண்டும், மீண்டும் கால அவகாசம் வழங்குவது ஏன்?
நடப்பு கலந்தாய்வில் பங்கு கொள்ளும் லட்சக்கணக்கான மாணவர்கள் ஒவ்வொரு வரும், தாங்கள் சேர விரும்பும் பொறியியல் கல்லூரிகளில், பேராசிரியர்கள் நிலை மற்றும் ஆய்வங்கள் நிலை போன்ற கட்டமைப்பைப் பற்றித் தெரிந்து கொள்வது அடிப்படை உரிமை. அதை உறுதி செய்வது உயர் கல்வித்துறையின் அடிப்படை பொறுப்பு. ஆனால் உயர் கல்வித்துறை மிகவும் அலட்சியமாகச் செயல்பட்டு வருகிறது. மேலும் பொறியியல் கலந்தாய்வு வரும் 26.08.2025 அன்று நிறைவடைந்த பிறகு பொறியியல் கல்லூரிகளின் முதல் ஆண்டு பிரிவு செயல்படத் துவங்கும். பேராசிரியர்கள் மற்றும் ஆய்வக வசதி குறைபாடு உடைய பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களின் கல்வியின் தரமும், எதிர்காலமும் என்ன ஆகும் என்பது பெரிய கேள்வி.

தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு, அண்ணா பல்கலைக்கழகம் கொடுத்த கால அவகாசமான 45-நாட்களுக்குள் மாணவர்கள் சேர்க்கையே முடிந்து, கல்லூரிகள் இயங்கும் நிலையில், எப்படி கல்லூரிகள் தங்கள் குறைபாடுகளைச் சரி செய்யும்?. ஒரு வேலை குறைகளைச் சரி செய்யாத பொறியியல் கல்லூரிகள் மீது அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுக்க முயன்றால், மாணவர்கள் சேர்க்கையைக் காரணம் காண்பித்து, தங்கள் மீதான நடவடிக்கையிலிருந்து தப்பித்துக் கொள்ளும் அபாயம் இருக்கிறது. இதற்காகவே அண்ணா பல்கலைக்கழகம், தனியார் பொறியியல் கல்லூரிகளுக்குக் கால அவகாசம் கொடுத்துள்ளது போன்று இருக்கிறது.
ஏற்கனவே, தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு, அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் பேராசிரியர்கள் மோசடி சார்பாக, கடந்த ஆண்டு எச்சரிக்கை அறிவிப்பு கொடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பேராசிரியர்கள் சரிபார்க்க அழைக்கப்பட்டது. இந்த ஆண்டு இணைவு அங்கீகார ஆய்வு துவங்கும் போது எச்சரிக்கப்பட்டது. மீண்டும் 141 தனியார் பொறியியல் கல்லூரிகள் குறைபாடுகள் என அறிவிப்பு செய்யப்படுகிறது.
முற்றிலும் வெளிப்படைத்தன்மை இல்லாமல் தனியார் பொறியியல் கல்லூரிகளையும், நிர்வாகத்தையும் காப்பாற்றும் நோக்கத்திலேயே அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் செயல்படுகிறது. பொறியியல் கல்லூரிகளில் வாரியாக குறைபாடுகளை தற்பொழுது அறிவிப்பு செய்தால், கலந்தாய்வில் பங்கு கொள்ளும் மாணவர்கள், தங்கள் படிப்பிற்கு உரியத் தகுதியான பொறியியல் கல்லூரிகளில் சேர இயலும்.

மாறாக அந்த பட்டியலை ஒளித்து வைத்துக் கொண்டு, அறிவிப்பு கொடுத்திருக்கிறோம், எச்சரிக்கை செய்கிறோம், விரைவில் சரி செய்யக் கால அவகாசம் கொடுக்கிறோம் என்பது மாணவர்களுக்கு மற்றும் மற்றும் பெற்றோர்களுக்கு, அண்ணா பல்கலைக்கழகம் செய்யும் பெரும் துரோகம். அத்துடன் மாணவர்களின் எதிர்காலத்தைக் குழி தோண்டி புதைப்பதற்குச் சமம். கடந்த ஆண்டு இதே ஜூலையில் அறப்போர் இயக்கம் சார்பில் 352 பேராசிரியர்கள் போலியாக, 972 இடங்களில் முழுநேரப் பேராசிரியராக பணிபுரிவதாகக் கணக்கு காண்பிக்கப்பட்டு மோசடியாக, அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைவு அங்கீகாரம் பெற்றுள்ளனர் என்றும், இந்த மோசடியில் சுமார் 224 தனியார் பொறியியல் கல்லூரிகள் ஈடுபட்டுள்ளனர் என்றும் வெளிப்படுத்தியிருந்தோம். அதனைத் தொடர்ந்து கண்காணித்தும் வருகிறோம்.
அண்ணா பல்கலைக்கழகம், இன்று வரை, அந்த மோசடியில் ஈடுபட்ட தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகம் மீதோ, மோசடியாக அங்கீகார பரிந்துரை செய்த ஆய்வுக்குழு மீதோ எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த ஆண்டும், பொறியியல் கல்லூரிகளில் பேராசிரியர்களின் நிலை மற்றும் ஆய்வகங்களின் நிலை பற்றிய ஆய்வறிக்கை இன்று வரை வெளியிடவில்லை. எனவே, உடனடியாக பொறியியல் கல்லூரிகள் வாரியாக, பேராசிரியர்கள் மற்றும் ஆய்வக குறைபாடுகள் பற்றி வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். மோசமான குறைபாடுகள் உடைய கல்லூரிகள் இந்த ஆண்டு கலந்தாய்விலிருந்து நீக்க வேண்டும். மோசமான குறைபாடுகள் உடைய கல்லூரிகளில், தற்பொழுது பயிலும் மாணவர்களின் கல்வித்தரம் உறுதி செய்யவேண்டும். நிபந்தனையுடன் அங்கீகாரம் வழங்கப்பட்ட கல்லூரிகள் பட்டியல் உடனே வெளியிட வேண்டும்" என்றார்.

இதுகுறித்து விளக்கம் பெறுவதற்காக அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் பிரகாஷை தொடர்பு கொண்டோம். ஆனால் அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை. இதையடுத்து எஸ்.எம்.எஸ் மூலமாக நமது கேள்விகளையும் அனுப்பி வைத்தோம். அதற்கும் அவர் பதில் அளிக்கவில்லை. அவர் விளக்கம் அளிக்கும் பட்சத்தில் உரியப் பரிசீலனைகளுக்குப் பிறகு பிரசுரிக்கப்படும்!