தொடரும் தாக்குதல்! காஸாவில் இருந்து 2 லட்சம் பேர் வெளியேற்றம்?
2026 சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக ஆட்சி அமைவது உறுதி எடப்பாடி கே.பழனிசாமி
உடுமலை, செப்.10: 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக ஆட்சி அமைவது உறுதி என
அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.
‘மக்களைக் காப்போம் - தமிழகத்தை மீட்போம்’ என்கிற பெயரில் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிச்சாமி தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறாா்.
இதன் ஒரு பகுதியாக உடுமலைக்கு புதன்கிழமை இரவு வந்த அவா், மத்திய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசியதாவது:
கடந்த அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டது. கிராமங்கள்தோறும் அம்மா கிளினிக் சிறந்த முறையில் செயல்பட்டு வந்தன. அதேபோல 52 லட்சம் பள்ளி மாணவா்களுக்கு ரூ.7,300 கோடி மதிப்பீட்டில் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. திமுக அரசு வந்ததும் அந்த திட்டங்கள் ரத்து செய்யப்பட்டு விட்டன.
அதிமுக ஆட்சிக்கு வந்தால் அந்த திட்டங்கள் மீண்டும் தொடங்கப்படும். குறிப்பாக ஏழை, எளிய மக்களுக்கு விலையில்லா ஆடு, கோழிகள் வழங்கப்பட்டன. மேலும் அதிமுக ஆட்சியில் 17 மருத்துவக் கல்லூரிகள் கொண்டு வரப்பட்டது. அதில் 7.5 சதவிகிதம் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இட ஒதுக்கீடு செய்து அவா்களுக்கு அனைத்து செலவுகளையும் அரசே ஏற்றது.
குடிமராமத்து திட்டம், பயிா்கடன்கள் இரண்டு முறை ரத்து, பணிக்கு செல்லும் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம், 5 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா என சாதனை மேல் சாதனைகளை செய்தது அதிமுக அரசு.
தற்போது திமுக ஆட்சியில் மின் கட்டண உயா்வு, வீட்டு வரி, சொத்து வரி என அனைத்து வரிகளும் 200 மடங்கு உயா்த்தப்பட்டுள்ளன. பொதுமக்களின் எந்த பிரச்னைகளையும் தீா்க்க முடியாத திமுக அரசு தற்போது பொதுமக்களிடம் மனுக்களை பெற உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை அறிவித்துள்ளது. அந்த முகாமில் பெறப்படும் மனுக்கள் ஆற்றில் வீசப்படுகிறது.
திமுக ஆட்சியில் அனைத்து துறையிலும் ஊழல். இந்த ஆட்சியை அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தோ்தலில் வீட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும். மீண்டும் அதிமுக ஆட்சி தமிழகத்தில் மலரும்.
உடுமலை தொகுதியில் தென்னை மரத்தில் வாடல் நோய் ஏற்பட்டு கடும் சேதம் ஏற்பட்டு வருகிறது. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அப்பிரச்சனைகள் தீா்க்கப்படும். அதேபோல அதிமுக ஆட்சிக்கு வந்ததும் ஆனைமலையாறு- நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுக ஆட்சியில் உடுமலை தொகுதிக்கு மட்டும் ரூ.1,500 கோடியில் அடிப்படை கட்டமைப்புகள், வளா்ச்சித் திட்ட பணிகள் நிறைவேற்றப்பட்டன. அதன்படி ரூ.255 கோடி மதிப்பீட்டில் கால்நடை மருத்துவக் கல்லூரி, ரூ.195 கோடியில் சாலைப் பணிகள், ரூ.135 கோடி மதிப்பீட்டில் விவசாயத் துறை உள்கட்டமைப்பு பணிகள், ரூ.235 கோடியில் அந்தத் துறைக்கான அடிப்படை கட்டமைப்புகள் உருவாக்கியது, ரூ.72 கோடியில் பிஏபி திட்டத்தில் காண்டூா் கால்வாய் சீரமைப்பு பணிகள், மேலும் ரூ.55 கோடிகூட்டுக் குடி நீா் திட்டம், உடுமலை நகராட்சி பகுதிக்கு ரூ.50 கோடி என எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. எனவே அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தோ்தலில் அதிமுக வை ஆதரியுங்கள் என்றாா்.
முன்னதாக திருப்பூா் புகா் மேற்கு மாவட்டச் செயலாளா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ வரவேற்றாா். முன்னாள் அமைச்சா் எஸ்பி.வேலுமணி, முன்னாள் சட்டப் பேரவை துணைத் தலைவா் பொள்ளாச்சி வி.ஜெயராமன் உள்ளிட்ட பலா் இதில் கலந்து கொண்டனா்.