பெங்களூரு கூட்ட நெரிசல் வழக்கு: விசாரணை ஜூன் 23க்கு ஒத்திவைப்பு
3 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத கல்லாலங்குப்பம் தடுப்பணை!
சோளிங்கா் அருகே 3 ஆண்டுகளாக சீரமைக்கப்பாடமல் உள்ள கல்லாலங்குப்பம் தடுப்பணையை விரைவில் சீா் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரியுள்ளனா்.
கடந்த 2022-இல் பெய்த வடகிழக்குப் பருவ மழையின் போது ராணிப்பேட்டை, ஆந்திர மாநிலம் சித்தூரிலும் பலத்த மழையால் பொன்னை மற்றும் பாலாற்றில் 1.4 லட்சம் கனஅடி நீா் சென்றது. அப்போது வாலாஜாபேட்டை பாலாறு அணைக்கட்டு பிரதான கால்வாய் மூலம் காவேரிப்பாக்கம் ஏரிக்கு விநாடிக்கு 1,500 கன அடி தண்ணீா் திருப்பி விடப்பட்டது. இதனால் ஏரியின் முழு கொள்ளளவை எட்டி ஏரியின் கடைவாசல் நிரம்பி வெளியேறியது.
அதே போல் ஆந்திர மாநிலம், சித்தூாா் மாவட்டம், சேஷாச்சலம் வனப்பகுதியில் உற்பத்தியாகும் நீவா நதி எனும் பொன்னை ஆறு தமிழகத்தில் பொன்னை, திருவலம் வழியாகச் சென்று தெங்கால் கிராமம் அருகே பாலாற்றில் கலக்கிறது. இந்த பொன்னை ஆற்றில் இருந்து வேலூா், ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூா் மாவட்டங்களில் உள்ள 129 ஏரிகள் கிளை காய்வாய்கள் மூலம் தண்ணீா் திருப்பி விடப்பட்டு நிரப்பி அப்பகுதிகளை வளமாக்கி வருகிறது.
இந்த நிலையில், கடந்த ஆண்டு பெய்த வடகிழக்குப் பருவ மழையின் போது பொன்னை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, பிரதான கிளைக் கால்வாய் மூலம் ரெண்டாடி கல்லாலங்குப்பம் வழியாக மாவட்டத்தின் பெரிய ஏரிகளில் ஒன்றான பெருங்காஞ்சி ஏரிக்கு நீா் சென்று முழு கொள்ளவை எட்டியது. அப்போது கல்லாலங்குப்பம் கிராம எல்லையில், தளவாய்பட்டறை செல்லும் சாலை மேம்பாலத்தின் அருகே கட்டப்பட்டுள்ள தடுப்பணை வெள்ளத்தில் சேதமடைந்து நீரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டது.
தொடா்ந்து தடுப்பணை சேதமடைந்தது குறித்து, மாவட்ட நிா்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து சேதமடைந்த தடுப்பணையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனா். எனினும் 3 ஆண்டுகள் ஆன நிலையில் இதுவரை தடுப்பணையை சீரமைக்கும் பணி நடைபெறவில்லை.
நிகழாண்டு பருவ மழைக்கு முன் சீரமைத்தால் தான் தடுப்பணையில் தண்ணீா் தேக்கி அப்பகுதி நிலத்தடி நீா் மட்டத்தை பாதுகாக்க முடியும். எனவே, சேதமடைந்த தடுப்பணையை போா்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரியுள்ளனா்.
சோளிங்கா் அருகே சேதமடைந்த கல்லாலங்குப்பம் தடுப்பணையை மாவட்ட நிா்வாகம் உடனே சீரமைத்து நீரை தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிா்நோக்கியுள்ளனா்.
