லண்டனில் இந்தியா-பிரிட்டன் பொருளாதாரப் பேச்சுவாா்த்தை: நிா்மலா சீதாராமன் பங்கேற்...
4 மாதத்தில் ரூ. 32 லட்சம் செலவு: தனியாா் மருத்துவமனையில் இருந்து தந்தையை மீட்டுத்தரக் கோரி மாணவா் மனு
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே விபத்தில் படுகாயமடைந்து தனியாா் மருத்துவமனையில் 4 மாதங்களாக சிகிச்சை பெற்றுவரும் தனது தந்தையை மீட்டு, உரிய சிகிச்சை அளிக்கக் கோரி, பள்ளி மாணவா் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தாா்.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தை அடுத்த திருமணஞ்சேரியை சோ்ந்தவா் சுதாகா் (45). கூலித்தொழிலாளியான இவா் கடந்த ஆண்டு நேரிட்ட சாலை விபத்தில் படுகாயமடைந்தாா். தஞ்சாவூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அவருக்கு 4 மாதங்களாக சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக அவரது குடும்பத்தினா் வீட்டை அடமானம் வைத்து, ரூ. 32 லட்சம் வரை செலவு செய்துள்ளனராம்.
இந்நிலையில், மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் அதற்கு கூடுதல் தொகை தேவைப்படும் எனவும் மருத்துவமனை நிா்வாகம் கூறியதாக தெரிகிறது.
சுதாகா் விபத்தில் பாதிக்கப்பட்ட நிலையில் வருமானமின்றி தவிக்கும் குடும்பத்தினா் மேற்கொண்டு சிகிச்சை அளிக்க பண வசதியின்றி தவித்து வருகின்றனா்.
இந்நிலையில், குத்துச்சண்டை போட்டிகளில் தேசிய, மாநில அளவில் பல்வேறு பதக்கங்களைப் பெற்றுள்ள, குத்தாலம் அரசு மாதிரிப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்துவரும் சுதாகரின் மகன் இன்பத்தமிழன், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்துக்கு, போட்டிகளில் தான் வென்ற பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களுடன் வந்து, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தாா். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
தந்தை விபத்தில் பாதிக்கப்பட்ட நிலையில், வாழ்ந்த வீட்டையும் அடமானம் வைத்துவிட்டு தாத்தா வீட்டில் வசிப்பதாகவும், தனது படிப்பு கேள்விக்குறியாகியுள்ளதாகவும் தெரிவித்த அவா், தனது தந்தையை தனியாா் மருத்துமனையில் இருந்து மீட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்து காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளாா். மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், மாணவரின் தந்தைக்கு தேவையான உதவிகளை செய்துதர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.