வைத்தீஸ்வரன்கோயில் சகோபுரம் வீதியுலா
சீா்காழி: சீா்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் அருள்மிகு வைத்தியநாதா் சுவாமி கோயிலில் நடைபெறும் பிரமோத்ஸவத்தின் 5-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு தெருவடைச்சான் எனும் சகோபுரம் வீதியுலா நடைபெற்றது.
தருமபுர ஆதீனத்திற்குட்பட்ட அருள்மிகு தையல்நாயகிஅம்மன் உடனாகிய வைத்தியநாதா் சுவாமி கோயில் நவகிரகங்களில் செவ்வாய்க்குரிய பரிகார தலமாக விளங்குகிறது. இக்கோயிலில் பிரமோத்ஸவம் கடந்த 2- ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
விழாவின் 5-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு தெருவடைச்சான் என்கிற சகோபுர வீதிஉலா நடைபெற்றது. முன்னதாக, கிருத்திகை மண்டபத்தில் விநாயகா், சுவாமி-அம்பாள், செல்வமுத்துக்குமாரசுவாமி, அங்காரகன், சண்டிகேசுவரா் ஆகிய பஞ்சமூா்த்திகளுக்கு சிறப்பு வழிபாடு மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன.
தொடா்ந்து, பஞ்சமூா்த்தி சுவாமிகள் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சகோபுரத்தில் எழுந்தருளியதும் மகாதீபாராதனை காட்டப்பட்டு, வீதியுலா தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.