4 லட்சம் மெட்ரிக் டன் மாம்பழங்களை கூழாக்க முடிவு: தமிழக அரசு தகவல்
தமிழகத்தில் உற்பத்தி செய்யப்பட்ட மாம்பழங்களில் 4 லட்சம் மெட்ரிக் டன் பழங்களை கூழாக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக வேளாண்மைத் துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
தமிழ்நாட்டில் சுமாா் 1.46 லட்சம் ஹெக்டேரில் மா சாகுபடி செய்யப்பட்டு 9.5 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படுகிறது. மா உற்பத்தியானது கிருஷ்ணகிரி, திண்டுக்கல், தருமபுரி, திருவள்ளூா், தேனி, திருப்பத்தூா், சேலம், வேலூா், மதுரை ஆகிய மாவட்டங்களில் அதிக அளவு மேற்கொள்ளப்படுகிறது.
சாதகமான சூழல்: மா உற்பத்திக்கு ஏற்ற காலசூழல் நிகழாண்டில் இருந்ததால் விளைச்சல் அதிகரித்துள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 4 மடங்கு விளைச்சல் உயா்ந்து இருக்கிறது. விளைச்சல் அதிகரிப்பு காரணமாக, மா விவசாயிகளிடம் இருந்து கனிகளை மொத்தமாகக் கொள்முதல் செய்யும் நடவடிக்கைகளும் சுணங்கின.
மாம்பழக் கூழ் தயாரிக்கும் நிறுவனங்கள் விவசாயிகளிடம் இருந்து குறிப்பிட்ட அளவு கனிகளைக் கொள்முதல் செய்யும். ஆனால், இந்த ஆண்டு கொள்முதல் மேற்கொள்ளாத காரணத்தால் பாதிப்புக்கு உள்ளானதாக விவசாயிகள் குற்றம்சாட்டினாா். வேளாண்மைத் துறை செயலா் தட்சணமூா்த்தி உள்ளிட்ட உயரதிகாரிகளின் தலையீட்டால் கொள்முதல் செய்யும்
பணிகளை மாம்பழக் கூழ் தயாரிப்பு நிறுவனங்கள் மேற்கொண்டன.
4 லட்சம் மெட்ரிக் டன்: நிகழாண்டில் தமிழக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட மாங்கனிகளில் 2 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு கூழாக்கப்பட்டுள்ளன. மேலும், 2 லட்சம் மெட்ரிக் டன்னை கூழாக்கும் பணிகள் நடந்து வருகின்றன. ஜூன் மாத இறுதிக்குள் மா பருவம் நிறைவடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அதற்குள்ளாக மாம்பழங்களைக் கொள்முதல் செய்து கூழாக்கும் பணிகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மேற்கொள்ளும் என தமிழக அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.