தொழில்நுட்பத்தை ஜனநாயகப்படுத்தியது டிஜிட்டல் இந்தியா திட்டம்: அமித் ஷா
6 எஞ்சின்கள், 295 பெட்டிகள், 3.5 கி.மீ : உலகின் மிகப்பெரிய சரக்கு ரயில் `சூப்பர் வாசுகி’ தெரியுமா?
நாட்டில் ரயில் சேவை மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. ரயில்களில் பண்டிகை காலத்தில் டிக்கெட் எடுப்பது என்பது சவாலான ஒன்றாக இருக்கிறது. இதனால் மக்கள் ஏஜென்டுகளின் துணையை நாடவேண்டிய நிலையில் இருக்கின்றனர். இதே போன்று நாட்டிற்குள் சரக்குகளை எடுத்துச்செல்லவும் சரக்கு ரயில்கள் முக்கியமான பங்கு வகிக்கிறது.
`சூப்பர் வாசுகி’
மகாராஷ்டிராவில் இயக்கப்படும் `சூப்பர் வாசுகி’ என்ற சரக்கு ரயில்தான் உலகிலேயே மிகப்பெரிய ரயிலாக கருதப்படுகிறது. நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு 'ஆஷாதி கா அம்ரித் மஹோத்சவ்' திட்டத்தின் கீழ் இந்த ரயிலை அறிமுகம் செய்தது. இதில் மொத்தம் 295 ரயில் பெட்டிகள் இருக்கிறது. இதனை 6 ரயில் எஞ்சின்கள் சேர்ந்து இழுத்து வருகிறது.
3.5 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த ரயில் நாக்பூரில் உள்ள அனல் மின் நிலையத்திற்கு தேவையான நிலக்கரியை எடுத்து வரும் வேலையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

சத்தீஷ்கரில் இருந்து நிலக்கரியுடன் பயணத்தை தொடங்கும் வாசுகி 11.20 மணி நேரத்தில் நாக்பூர் வந்து சேருகிறது. இந்த ரயிலின் ஒரு முனையில் இருந்து அடுத்த முனைக்கு நடந்து செல்வதாக இருந்தால் ஒரு மணி நேரம் பிடிக்கும். அதோடு இந்த ரயில் கிளம்விட்டால் மற்ற ரயில்கள் அனைத்தும் ஒதுங்கி நின்று வழிவிட ஆரம்பித்துவிடும். வாசுகியை வேறு எந்த ரயில் நிலையத்திலும் நிறுத்த முடியாது. பெரும்பாலான ரயில் நிலையத்தில் பிளாட்பார தண்டவாளம் மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களை நிறுத்தும் வகையில் மட்டுமே கட்டி இருப்பர். ஆனால் சூப்பர் வாசுகி 3.5 கிலோமீட்டர் நீளம் கொண்டது என்பதால் வழியில் வேறு எந்த இடத்திலும் அதனை நிறுத்திவிட்டு வேறு ரயில்களுக்கு வழிவிடுவது என்பது சாத்தியம் கிடையாது. வாசுகிக்கு பின்னால் வரும் ரயில் அதனை முந்திச்செல்வது முடியாத காரியம் ஆகும்.
மேலும் ஒரு ரயில்...
சத்தீஷ்கரில் இருந்து இந்த ரயில் மலைப்பகுதி வழியாக பாம்பு போன்று வளைந்து வளைந்து வருவதை பார்க்கும்போது மிகவும் ரம்மியமாக இருக்கிறது. இதில் 27 ஆயிரம் டன் நிலக்கரியை ஒரே நேரத்தில் எடுத்துச்செல்ல முடியும். இந்த ரயில் ஒரு முறை எதாவது லெவல் கிராசிங்கை கடக்கும்போது மற்ற வாகனங்கள் அதற்கு வழிவிட்டு மணிக்கணக்கில் காத்திருக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
இந்த ரயில் குறித்து மத்திய ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி மைக்கேலிடம் பேசியபோது, ''சரக்குகளை விரைவாகவும், அதிகமாகவும் எடுத்துச்செல்லும் நோக்கில் இந்த ரயில் சரக்கு போக்குவரத்திற்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அனல் மின் நிலையத்திற்கு அதிகப்படியான நிலக்கரி தேவையாக இருப்பதால் இந்த ரயில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இது போன்ற மேலும் ஒரு ரயிலை இயக்குவது குறித்து மத்திய ரயில்வே பரிசீலித்து வருகிறது. அது குறித்து விரைவில் இறுதி முடிவு எடுக்கப்படும்''என்று தெரிவித்தார்.
Super Vasuki - India's longest (3.5km) loaded train run with 6 Locos & 295 wagons and of 25,962 tonnes gross weight.#AmritMahotsavpic.twitter.com/3oeTAivToY
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) August 16, 2022
இந்தியாவில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தினமும் 13 ஆயிரம் ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்தியாவின் ஒவ்வொரு பகுதியும் ரயிலால் இணைக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் இயக்கப்படும் ரயில்களில் தினமும் 4 கோடி மக்கள் பயணம் செய்கின்றனர். ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து புதுப்புது ரயில்களை அறிமுகம் செய்து வருகிறது. கடைசியாக அறிமுகம் செய்யப்பட்டவந்தே பாரத் ரயிலில் இப்போது படுக்கை வசதியை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. ஒரிரு ஆண்டில் புல்லட் ரயிலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இது தவிர நாடு முழுவதும் மெட்ரோ நகரங்களில் மெட்ரோ ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.