MV Wan Hai 503: தீப்பற்றி எரியும் கப்பல்; 15 டிகிரி சாய்வு... டன் கணக்கான ரசாயன பொருள்களால் அச்சம்!
கேரள மாநிலம், கண்ணூர் அழிக்கால் துறைமுகத்திலிருந்து 44 நாட்டிக்கல் மைல் தொலைவில் எம்.வி வான் ஹாய் 503 (MV Wan Hai 503) என்ற கப்பல் நேற்று காலை தீப்பிடித்து எரிந்தது. கப்பலில் கேப்டன் உள்பட 18 பேர் லைஃப் ஜாக்கெட் அணிந்துகொண்டு கடலில் குதித்து தப்பினர். அவர்களை கடலோர காவல் படையினர் நேற்று இரவு மீட்டனர். அதில் 5 பேர் தீ காயம் அடைந்துள்ளதால், அவர்கள் மங்களூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அதில் படுகாயம் அடைந்த 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். காணாமல்போன 4 ஊழியர்களை தேடும் பணி நடந்துவருகிறது. அந்த கப்பல் தைவான் நாட்டைச் சேர்ந்த நிறுவனத்துக்கு சொந்தமானது எனவும், கப்பலில் உள்ள 157 கன்டெய்னர்களில் ஆபத்தான பொருட்கள் உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. வெடித்து சிதறும் தன்மைகொண்ட பொருட்களும் அதில் உள்ளன. அவை சுற்றுச்சூழலுக்கும், கடல் உயிரினங்களுக்கும் ஆபத்தை விளைவிக்கும் பொருட்கள் என கூறப்படுகின்றன.

நிபுணர்கள் எச்சரிக்கை!
ட்ரைக்ளோரோபென்சீன், ட்ரை எத்தலின், டெட்ராமைன், பென்ஸோபினோண், நைட்ரோ செல்லுலோஸ், தீப்பிடிக்கும் தன்மைகொண்ட் பிசின், பூச்சிக்கொல்லி மருந்துகள், பெயிண்ட் போன்றவை டன் கணக்கில் உள்ளன. இவை கடலில் கலந்தால் மிகப்பெரிய அளவிலான ஆபத்தை விளைவிக்கக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதற்கிடையே இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படை ஆகியவை கப்பலில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

15 டிகிரி சாய்ந்த கப்பல்!
கப்பலின் நடுப்பகுதியில் அடர்ந்த கரும்புகையுடன் தீ எரிந்துவருவதாக இந்தியன் கோஸ்ட் காட் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கப்பலின் நடுப்பாகம் முதல் ஊழியர்கள் தங்கும் பிளாக் அருகே உள்ள கன்டெய்னர்கள் வரை தீ படர்ந்துள்ளதாகவும், முன்பகுதியில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் இந்தியன் கோஸ்ட் காட் தெரிவித்துள்ளது. கப்பல் 10 முதல் 15 டிகிரிவரை இடப்புறமாக சாய்ந்துள்ளது. கோஸ்ட் காட்-க்கு சொந்தமான கப்பல்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.