3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறவிருக்கிறது: ரிசர்வ் வங்கி ஆளுநர்
Sarathkumar: ``இதுகூட தெரியாமல் பேசுகிறீர்களே விஜய்" - TVK விஜய் பேச்சுக்கு நடிகர் சரத்குமார் பதில்
கள்ளக்குறிச்சியில் நடிகர் சரத்குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. அதில் உரையாற்றிய நடிகர் சரத் குமார், ``நான் உழைப்பால் உயர்ந்தவன். என் 36 ஆண்டுகால சினிமாவில் நீங்கள் கொடுத்ததை மீண்டும் உங்களுக்கே கொடுக்கத்தான் வந்திருக்கிறேன்.
நான் டெல்லியில் பிறந்தவன். எனக்கும் டெல்லிக்கும் தொடர்பிருக்கிறது. அதனால்தான் கலைஞர் என்னை எம்.பியாக அறிவித்து டெல்லி அனுப்பினார்.
இப்போது டெல்லியோடு அரசியல் களத்தில் இணைந்திருக்கிறோம். வரும் சட்டமன்றத் தேர்தல் மிகவும் முக்கியமானது.

நெல்லையில் பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு அமித் ஷா ஜீ தலைமையில் கூட்டம் நடைபெற்றது. பூத் கமிட்டி அமைப்பது அவ்வளவு இலகுவான விஷமல்ல.
நான் தி.மு.கவுக்கு ஆதரவாக இருந்தபோது கடுமையாக உழைத்திருக்கிறேன். அப்போது 24 மணி நேரம் பிரசாரம் செய்யலாம். நான் 22 மணி நேரம் பிரசாரம் செய்திருக்கிறேன்.
இப்போது தி.மு.க சொல்லிக்கொண்டிருக்கும் நாற்பதும் நமதே என்பதை முதன் முதலில் சொன்னவன் நான். அதன்பிறகுதான் எல்லோரும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
உலகளவில் இந்தியாவை முன்னோக்கிக் கொண்டுச் செல்வது பிரதமர் மோடி. உலகளவில் இந்தியாவின் பொருளாதாரத்தை 4-வது இடத்துக்கு கொண்டுவந்திருக்கிறார்.
தொலை நோக்குச் சிந்தனையாளர் மோடிஜீ. உலகம் முழுவதும் தமிழை வளர்த்துக்கொண்டிருக்கிறார். உலக நாடுகள் குறிப்பாக அமெரிக்காவின் ட்ரம்ப் இந்தியாவை உற்றுநோக்குகிறார்.
அதற்கு காரணம் மோடிஜீ என்றால் பயம். மோடிஜீ அஞ்சுவதுமில்லை இனி அஞ்சப்போவதுமில்லை. விரைவில் நம் தேசம் பொருளாதாரத்தில் முதலிடத்தைப் பிடிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
வெளிப்படையாக, வெற்றிகரமாக ஆட்சி செய்துக்கொண்டிருக்கும் ஒரு பிரதமரை கத்துக்குட்டியான ஒருவர் மிஸ்டர் பிரைமினிஸ்டர் என்று அழைக்கிறார்.
நீங்கள் கொடைநாட்டிலே நடுத்தெருவில் நின்றபோது மிஸஸ் ஜெயலலிதா என அழைத்திருப்பீர்களா? இப்போதும் உங்களால் அப்படி சொல்ல முடியாது.
சிங்கம் என்றால் சிங்கமாகத்தான் இருக்க வேண்டும். சாப்பிட்டுவிட்டு வீட்டில் தூங்கும் சிங்கமாக இருக்கக் கூடாது. முதல்வரையும் மாமா என அழைக்கிறார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை மரியாதையுடன் அழைக்க வேண்டும். அந்த தரத்தைக் கற்றுக்கொள்ளுங்கள் விஜய்.
நீட் தேர்வால் பயனடைந்தவர்கள் யார்? தகுதியுள்ளவர்கள்தான் மருத்துவராக வேண்டும். குக்கிராமத்தில் இருப்பவர்களும் நீட் தேர்வில் வெற்றிப்பெற்றால் அவர்களும் மருத்துவராகலாம் என்றால், அதை ஏன் வேண்டாம் என்கிறீர்கள்? எனவே நீட் தேவை.
மோடி ஆட்சி காலத்தில் எங்காவது ஒரு மசூதி இடிக்கப்பட்டதா? உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் ராமர் கோயில் கட்டப்பட்டது. மசூதியும் கட்டப்பட்டது.
தேவையில்லாமல் நீங்கள் தான் மதவாதத்தை தூண்டிக்கொண்டிருக்கிறீர்கள். அபுதாபியில் இந்து கோயிலை கட்டியிருக்கிறார்கள் என்றால் அவர் மீது இஸ்லாமியர்கள் நன்றியுடன்தான் இருக்கிறார்கள்.
பிரதமர் மோடியின் 12 ஆண்டு ஆட்சியில் ஒரு மீனவர் கூட உயிரிழக்கவில்லை. தெரிந்துகொண்டு பேசுங்கள் விஜய். கச்சத்தீவை கொடுத்தது கலைஞர். தடுத்தது வாஜ்பாய். இதுகூட தெரியாமல் பேசுகிறீர்களே விஜய். அரசியலில் யாரைப் பற்றி பேசுகிறோம் என்பதை கவனிக்க வேண்டும்.
கச்சத்தீவை மீட்க பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்து வருகிறார். ஆணவக் கொலை, போதைப் பொருள் அதிகரிப்பு என தமிழ்நாடு சிக்கியிருக்கிறது." எனப் பேசினார்.