'நக்சல்களுக்கு உதவியவர்' - சுதர்ஷன் ரெட்டியை விமர்சனம் செய்த அமித் ஷா; கிளம்பிய எதிர்ப்பு!
தமிழ்நாட்டை இன்னும் பாஜக-வால் பிடிக்க முடியவில்லை என்பது அந்தக் கட்சியினருக்கு பெரும் கவலை.
அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது.
இந்த நிலையில் தான், திடீரென்று கடந்த ஜூலை மாதம் 21-ம் தேதி, துணை ஜனாதிபதியாக இருந்த ஜக்தீப் தன்கர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். இதற்கு தன்னுடைய உடல்நிலையை ஜக்தீப் தன்கர் காரணம் காட்டியிருந்தாலும், பல்வேறு பேச்சுகள் எழுந்தன.
சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு
அடுத்த ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் மற்றும் ஜக்தீப் தன்கரின் திடீர் ராஜினாமாவை இணைத்து தற்போது ஸ்கோர் செய்ய முயன்று வருகிறது பாஜக.
ஆம்... தமிழ்நாட்டைச் சேர்ந்த பாஜக தலைவரான சி.பி.ராதாகிருஷ்ணனை தங்களது துணை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தியுள்ளது.
இவருக்கு மாற்று கட்சியினர் இடம் கூட, நல்ல பெயர் இருக்கிறது. மேலும், மக்களிடம் இவருக்கு, 'மிஸ்டர் கிளீன்' என்ற பெயர் உண்டு.
இந்தியா களமிறக்கிய சுதர்ஷன் ரெட்டி
ஆனால், இவருக்கு எதிராக முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி சுதர்ஷன் ரெட்டியைக் களமிறக்கியுள்ளது இந்தியா கூட்டணி. இவரை தமிழ்நாட்டை ஆளும் திமுக கட்சியும் ஆதரிக்கிறது.
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினிடம், சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரிக்க சொல்லி போன்கால் செய்து கேட்டும், சுதர்ஷன் ரெட்டியையே ஆதரிக்கிறார்.
நேற்று சுதர்ஷன் ரெட்டி கூட்டணி கட்சிகளின் ஆதரவைத் திரட்ட சென்னை வந்திருந்தார். அந்த நிகழ்ச்சியில் ஸ்டாலின் கலந்துகொண்டிருந்தார்.

எதிர்க்கட்சிகள் கேள்வி
ஜக்தீப் தன்கர் விஷயத்தில் என்ன நடந்தது? அவர் இப்போது எங்கு இருக்கிறார்?' போன்ற கேள்விகளை எழுப்பி சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரிக்காமல், சுதர்ஷன் ரெட்டியை ஆதரிப்பதற்கான காரணத்தைச் சொல்கின்றனர்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, இன்று வெளியாகி உள்ள ஏ.என்.ஐ பேட்டியில் அமித் ஷா, "தன்கர் ஜி தன்னுடைய பணிகாலத்தில் நன்கு பணிபுரிந்தார்.
அவருடைய தனிப்பட்ட உடல்நல பிரச்னை காரணமாக ராஜினாமா செய்துவிட்டார். இதை வைத்து யாரும் எதாவது கண்டுபிடிக்க முயலக் கூடாது" என்று பேசியிருக்கிறார்.
நக்சல்...
கடந்த வெள்ளிக்கிழமை, கேரளாவில் பேசியபோது, 'நக்சல்களுக்கு உதவியவர் சுதர்ஷன் ரெட்டி. அவர் தான் சல்வா ஜூடும் தீர்ப்பை வழங்கினார். அந்தத் தீர்ப்பை வழங்காமல் இருந்திருந்தால், 2020-ம் ஆண்டுக்குள் நக்சல் தீவிரவாதம் ஒழிந்திருக்கும். அவர் தான் நக்சல் சித்தாந்தை விரும்பி, அந்தத் தீர்ப்பைக் கொடுத்தார்" என்று பேசியிருந்தார்.
அமித் ஷாவின் இந்தப் பேச்சுக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் எழுந்துள்ளது.
"ஒரு மூத்த அரசியல் தலைவர் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தவறாகப் பிரதிநிதித்துவப்படுத்துவது நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதிக்கக்கூடும்" என்று ஓய்வுப்பெற்ற நீதிபதிகள் கூட்டு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.