Tollgate: புதிதாக திறக்கவிருந்த டோல்கேட்டை அடித்து நொறுக்கிய மக்கள்... வத்தலகுண்டில் நடந்தது என்ன?
திண்டுக்கல்லில் இருந்து வத்தலகுண்டு வரை இருவழிச்சாலை மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் இருந்து குமுளி வரை நான்கு வழிச்சாலைக்காக திட்டம் தொடங்கப்படவுள்ளது. இந்நிலையில் இந்த இரு வழிச்சாலையில் வத்தலக்குண்டு அருகே லட்சுமிபுரம் என்ற பகுதியில் தேசிய நெடுஞ்சாலை சார்பில் டோல்கேட் அமைக்கப்பட்டுள்ளது.

நான்கு வழிச் சாலை பணிகள் முழுமையாக நிறைவு பெறாமல் டோல்கேட் செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் இன்று காலை டோல்கேட்டை திறப்பதற்கான ஏற்பாடுகளை நிர்வாகம் செய்தது. இதற்கு அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அதிருப்தியடைந்தனர்.
இன்று காலை 8 மணிக்கு டோல்கேட் செயல்பாட்டுக்கு வருவதாக டோல்கேட் ஊழியர்கள் மூலம் தெரியவந்துள்ளது. இதையறிந்த அப்பகுதி மக்கள் திடீரென டோல்கேட் பகுதியில் ஒன்று திரண்டு கற்கள், கம்புகளை கொண்டு அடித்து நொறுக்கினர். இதில் டோல்கேட் கண்ணாடி கூண்டுகள், கணினிகள், போன்கள் உள்ளிட்ட பொருள்கள் சேதமடைந்தன.

மேலும் டோல்கேட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் விவசாயிகள் பெண்கள் மற்றும் ஏராளமானோர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் வத்தலகுண்டு திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பாக காணப்பட்டது. நிகழ்விடத்திற்கு வந்த நிலக்கோட்டை வட்டாட்சியர் விஜயலட்சுமி, பட்டிவீரன்பட்டி இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வத்தலகுண்டு அருகே டோல்கேட் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.