Udit Narayanan: `அது அசிங்கமான ஒன்று அல்ல!' - சர்ச்சைக்கு உதித் நாராயணன் சொல்லும் பதில் என்ன?
முன்னணி பாடகர் உதித் நாராயணன் குறித்தான பேச்சுதான் சமூக வலைதளப் பக்கங்களில் நிரம்பியிருக்கிறது.
சமீபத்தில், உதித் நாராயணனின் கான்சர்ட்டில் பாடிக் கொண்டிருக்கும்போது மேடையை நோக்கி அவரின் பெண் ரசிகர்கள் வரத் தொடங்கினர். உதித் நாராயணனின் பாடலை ரசித்துக் கொண்டே மேடையின் அருகே புகைப்படங்கள் எடுப்பதற்கு அவர்கள் முயற்சித்திருக்கிறார்கள். அவர்களுக்கு புகைப்படத்தைக் கொடுத்ததோடு அவர்கள் அனைவருக்கும் உதித் நாராயணன் முத்தம் கொடுத்த விவகாரம் தற்போது பேசு பொருளாகியிருக்கிறது. அந்தக் காணொளியை பதிவிட்டு சமூக வலைதளப் பக்கங்களில் பலரும் அவரை விமர்சித்து வருகிறார்கள்.
அவர் மீது வைக்கப்படும் விமர்சனம் தொடர்பாக உதித் நாராயணனே வெளிப்படையாக பேசியிருக்கிறார். அவர், `` நான் என்னையோ எனது குடும்பத்தையோ அல்லது எனது நாட்டையோ அவமானப்படுத்தும் செயலையும் செய்திருக்கிறேனா? நான் எல்லாவற்றையும் அடைந்திருக்கும் இந்த வாழ்க்கை கட்டத்தில் ஏன் அப்படி ஏதாவது செய்ய வேண்டும்? உலகெங்கிலும் உள்ள மக்கள் எனது கான்சர்டுக்கு வந்து நிற்கிறார்கள். டிக்கெட்டுகள் மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்யப்பட்டு விற்கப்படுகின்றன. எனது ரசிகர்களுக்கும் எனக்கும் இடையே ஆழமான, தூய்மையான மற்றும் உடைக்க முடியாத பிணைப்பு உள்ளது.
அந்த களங்கமான வீடியோவில் நீங்கள் கண்டது எனது ரசிகர்களுக்கும் எனக்கும் இடையே உள்ள அன்பின் வெளிப்பாடு தான். அவர்கள் என்னை நேசிக்கிறார்கள், நான் அவர்களை இன்னும் அதிகமாக நேசிக்கிறேன். இது ஏதும் அசிங்கமான அல்லது ரகசியமான ஒன்று அல்ல. இது பொது மக்களுக்கு தெரிந்த ஒன்று. என் இதயம் தூய்மையானது. தூய அன்பின் ஒரு செயலில் அசிங்கமான ஒன்றை சிலர் பார்க்க விரும்பினால், நான் அவர்களுக்காக வருத்தப்படுகிறேன். மேலும், நான் அவர்களுக்கு நன்றி கூற விரும்புகிறேன். ஏனென்றால், இப்போது அவர்கள் என்னை ஏற்கனவே இருந்ததை விட இன்னும் பிரபலமாக்கியுள்ளார்கள்." எனக் கூறியிருக்கிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...