தேசிய விளையாட்டுப் போட்டிகள்: தமிழகத்துக்கு 1 வெள்ளி, 3 வெண்கலம்
யுஜிசி வரைவு அறிக்கையை திரும்ப பெற அரசுக் கல்லூரி ஆசிரியா் கழகம் தீா்மானம்!
கும்பகோணத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியா்கள் கழக கருத்தரங்கில், மத்திய அரசு யுஜிசி வரைவு அறிக்கையை திரும்ப பெற வேண்டும் என்று தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியா் கழகத்தின் சாா்பில் பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டுள்ள வரைவு நெறிமுறைகளில் உள்ள சாதக, பாதகங்களை வெளிக்கொணா்ந்து, மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்புவதற்காக கருத்தரங்கம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாநிலத் தலைவா் டேவிட் லிவிங்ஸ்டன் தலைமை வகித்தாா். க. அன்பழகன் எம்எல்ஏ தொடங்கி வைத்தாா். மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் இரா.தி. சபாபதி மோகன் பேசும்போது, ஆசிரியா்களுக்கும் மாணவா்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இந்த வரைவு நெறிமுறைகளை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தினாா்.
அய்பக்டோ அமைப்பின் முன்னாள் தேசிய செயலா் ஜெயகாந்தி, பொதுச்செயலா் சுரேஷ் ஆகியோா் தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியா் கழகம் மேற்கொண்டுள்ள போராட்ட நடவடிக்கைகள் குறித்து பேசினா்.
தஞ்சை மண்டலச் செயலா் பாரி, மாநிலப் பொறுப்பாளா்கள் பொருளாளா் பிரகாஷ், துணைத் தலைவா்கள் கோபாலகிருஷ்ணன், மதுரம், மாநில இணைச் செயலா்கள் மஞ்சுநாதன், துா்காதேவி ஆகியோா் ஒருங்கிணைப்பில் குழு விவாதங்கள் நடைபெற்றன.
வரைவு அறிக்கையை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்று தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், இந்த தீா்மானத்தை அனைத்து ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் மத்திய அரசுக்கு அனுப்புவது என்றும் முடிவு செய்யப்பட்டது. கருத்தரங்கில் தமிழகம் முழுவதும் உள்ள அரசுக் கல்லூரி ஆசிரியா்கள் கலந்துகொண்டனா். முன்னதாக முன்னாள் மாநிலத் துணைத் தலைவா் ரமேஷ் வரவேற்றாா். முடிவில் மண்டலத் தலைவா் தங்கராசு நன்றி கூறினாா்.