காசி தமிழ் சங்கமம் 3.0 அனுபவப் போட்டி: 46 பேருக்கு பரிசு - ஆளுநா் வழங்கினாா்
Yercaud Express: ரயிலைக் கவிழ்க்கச் சதி? தனிப்படைகள் அமைத்து ரயில்வே காவல்துறை விசாரணை;பின்னணி என்ன?
ஈரோடு ரயில் நிலையத்திலிருந்து சேலம் வழியாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு இரவு 9 மணிக்குத் தினசரி ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் இயங்கி வருகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் ஈரோடு ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் சேலம் மாவட்டம் சங்ககிரி அடுத்துள்ள மகுடஞ்சாவடி ரயில் நிலையத்திற்கு 2 கிலோ மீட்டர் முன்பு வந்துகொண்டிருந்தது.

அப்போது, ரயில் தண்டவாளத்தின் குறுக்கே வைக்கப்பட்ட ராட்சத இரும்பு கம்பி ரயில் இன்ஜினில் மோதி இன்ஜின் பழுதடைந்தது.
இதனை எதிர்பார்க்காத ரயில் ஓட்டுநர் சாதுரியமாக ரயிலை நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தால் ரயில்வே பயணிகள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகிய நிலையில், ரயில் பயணிகள் சுமார் மூன்று மணி நேரமாக கடும் அவதிக்கு உள்ளாகினர்.
இதனையடுத்து ரயில்வே துறை அதிகாரிகள் விரைந்து வந்து பழுதடைந்த ரயில் இன்ஜினைச் சரி செய்ய முயன்றனர். ஆனால், இன்ஜினில் ஏற்பட்ட பழுது சரியாகாததால், மாற்று இன்ஜினை வரவழைத்து ரயிலை அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து, ரயில் தண்டவாளத்தில் ராட்சத இரும்பு கம்பியை வைத்து ரயிலைக் கவிழ்க்கச் சதி செய்யப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் ரயில்வே காவல்துறையினர், மோப்ப நாய் குழுவினர் வரவழைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இரும்பு கம்பிகள் வைத்தது சதி வேலையா என்பதைக் கண்டறிய ரயில்வே காவல்துறை துணை கண்காணிப்பாளர் பாபு தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் காவல் ஆய்வாளர்கள் சிவசெந்தில்குமார், சாய்த்திரி ஆகியோர் கொண்ட குழுவினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக, இந்தச் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஒவ்வொரு கிராமங்களாகச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுவரை எந்தவித தடயங்களும் கிடைக்காத நிலையில் தொடர்ந்து இப்பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.