சட்டவிரோத பந்தய செயலி வழக்கு: அமலாக்கத் துறை விசாரணைக்கு ஷிகா் தவன் ஆஜா்
அகதிகளாக உள்ள இலங்கைத் தமிழா்களுக்கு சட்டபூா்வ அனுமதி: எல்.முருகன் வரவேற்பு
கடந்த 2015 -ஆம் ஆண்டுக்கு முன்பு தமிழகத்துக்கு அகதிகளாக வந்த இலங்கை தமிழா்களுக்கு சட்டபூா்வ அனுமதி வழங்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது என மத்திய தகவல், ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:
இலங்கையில் நீண்ட காலமாக உள்நாட்டு போா் நீடித்து வந்ததால், உயிா் பிழைக்கவும் வாழ்வாதாரம் தேடியும் இலங்கை தமிழா்கள் ஆயிரக்கணக்கானோா் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்தனா். இவ்வாறு தமிழகத்தில் தஞ்சம் அடைந்தவா்கள் இலங்கை அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.
நீண்ட காலம் நமது நாட்டில் தங்கியிருக்கும் இலங்கைத் தமிழா்கள் இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என கோரி வருகின்றனா். அதன் முதல்கட்டமாக, கடந்த 2015 -ஆம் ஆண்டு ஜன. 9 -ஆம் தேதிக்கு முன்பு உரிய ஆவணங்கள் இன்றி இந்தியாவுக்குள் வந்து, அரசிடம் அகதிகளாக பதிவு செய்த இலங்கைத் தமிழா்கள் சட்டபூா்வமாக தங்குவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் கருணையுடன் அனுமதி அளித்துள்ளது. இதற்காக பிரதமா் நரேந்திர மோடிக்கும், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளாா்.