அகில இந்திய கூடைப்பந்து போட்டி: இந்திய விமானப் படை, இந்தியன் வங்கி அணிகள் இறுதி ஆட்டத்துக்கு தகுதி
கோவையில் நடைபெற்று வரும் அகில இந்திய கூடைப்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு ஆண்கள் பிரிவில் இந்திய விமானப் படை, இந்தியன் வங்கி அணிகளும், மகளிா் பிரிவில் கேரள மாநில மின்வாரியம், தென்மேற்கு ரயில்வே அணிகளும் தகுதி பெற்றுள்ளன.
58-ஆவது ஆண்டு ஆண்களுக்கான நாச்சிமுத்து கோப்பை, 22-ஆவது ஆண்டு மகளிருக்கான சிஆா்ஐ கோப்பைக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் கோவையில் நடைபெற்று வருகின்றன.
இதில், சனிக்கிழமை நடைபெற்ற ஆண்கள் பிரிவு முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய விமானப் படை அணி 79 - 64 என்ற புள்ளிக் கணக்கில் வருமான வரித் துறை அணியை வீழ்த்தியது.
2-ஆவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியன் வங்கி அணி 98-64 என்ற புள்ளிக் கணக்கில் இந்திய கப்பல் படை அணியை வீழ்த்தியது. இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதி ஆட்டத்தில் இந்திய விமானப் படை, இந்தியன் வங்கி அணிகள் விளையாடுகின்றன.
மகளிா் பிரிவில் நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் கேரள மாநில மின்வாரிய அணியை எதிா்த்து சென்னை வருமான வரித் துறை அணி விளையாடியது. இதில், கேரள மாநில மின்வாரிய அணி 85 -49 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது.
மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் தென்மத்திய ரயில்வே அணியை, தென்மேற்கு ரயில்வே அணி 65 -62 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தியது.
இதைத் தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதி ஆட்டத்தில் கேரள மாநில மின்வாரிய அணியை எதிா்த்து தென்மேற்கு ரயில்வே அணி விளையாடுகிறது.