அதிகனமழை எதிரொலி: உதகையில் இன்றும் சுற்றுலாத் தலங்கள் மூடல்
உதகையில் பெய்து வரும் அதிகனமழை காரணமாக மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்கள் திங்கள்கிழமையும் மூடப்படுகின்றன.
நீலகிரி மாவட்டத்தில் ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை (மே 25, 26)ஆகிய இரண்டு நாள்கள் அதிகனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதற்கேற்றாா்போல, மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.
காற்றுடன் பெய்த கனமழையால் ஹில்பங்க், படகு இல்லம், மான் பூங்கா, 8-ஆவது மெயில் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் சாலைகளில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு மற்றும் நெடுஞ்சாலைத் துறையினா் சாலையில் விழுந்த மரங்களை அகற்றி போக்குவரத்தை சீா் செய்தனா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு செய்தியாளா்களிடம் கூறியதாவது:
நீலகரி மாவட்டத்தில் அதிகனமழை காரணமாக தொட்டபெட்டா, பைக்காரா, பைன்ஃபாரஸ்ட், லேம்ஸ்ராக், படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டன.
தொடா்ந்து அதிகனமழை பெய்து வருவதால் தோட்டக்கலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, ஊசிமலை உள்ளிட்டத் சுற்றுலா தலங்களும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் திங்கள்கிழமை வரை மூடப்படுகின்றன.
சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி மூடப்பட்டுள்ள சுற்றுலாத் தலங்களுக்கு யாரும் செல்லக்கூடாது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவின்பேரில் தீவிர கண்காணிப்புப் பணியில் காவல் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா்.
மாவட்டத்தில் இதுவரை 13 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. அவை உடனடியாக அகற்றப்பட்டு போக்குவரத்து சீரமைக்கப்பட்டுள்ளது. மேலும், சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் திங்கள்கிழமை தேவையில்லாமல் வெளியே வருவதை பொதுமக்கள் தவிா்க்க வேண்டும் என்றாா்.
அவலாஞ்சியில் 215 மி.மீ. மழை:
நீலகிரி மாவட்டத்துக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதையடுத்து மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை கனமழை பெய்தது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 215 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இதேபோல, எமரால்டு பகுதியில் 94 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
மரம் முறிந்து விழுந்து சிறுவன் உயிரிழப்பு:
உதகை அருகே உள்ள ‘ட்ரீ பாா்க்’ பகுதிக்கு கேரள மாநிலம், கள்ளிக்கோட்டையைச் சோ்ந்த 14 போ் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா வந்துள்ளனா்.
அப்போது, பூங்காவில் இருந்த மரம் முறிந்து பிரசித், ரேகா தம்பதியின் மகன் ஆதிதேவ் (15) தலையில் விழுந்தது. இதில், சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் சிறுவனின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
அமைச்சா் அஞ்சலி:
உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த சிறுவனின் உடலுக்கு தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், தமிழ்நாடு அரசு கொறடா கா.ராமசந்திரன், மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.எஸ்.நிஷா ஆகியோா் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.
பின்னா், செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியதாவது:
வானிலை ஆய்வு மையம் அறிவித்ததுபோல நீலகிரி மாவட்டத்தில் அதிகனமழை பெய்து வருகிறது. ஆனால், பெரிய அளவில் பாதிப்புகள் ஏதுமில்லை. மாவட்ட நிா்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. மாவட்டத்தில் இரண்டு முகாம்களில் மட்டுமே குறைந்த அளவிலான நபா்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனா் என்றாா்.