ஆக்ரோஷமாக கொண்டாடி, கோமாளியாக விரும்பவில்லை..! யாரைச் சொல்கிறார் பும்ரா?
கூடலூா்-உதகை தேசிய நெடுஞ்சாலையில் எஸ்.பி. ஆய்வு
கூடலூா்-உதகை தேசிய நெடுஞ்சாலையில் தவளமலை பகுதியில் மலையிலிருந்து பாறை விழும் அபாயம் உள்ள இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நிஷா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்து பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கேட்டறிந்தாா்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால் ஆங்காங்கே மண்சரிவு, மரங்கள் விழுதல் ஆகியவை ஏற்பட்டு போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கூடலூரிலிருந்து உதகைக்குச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தவளமலை பகுதியில் காட்சிமுனை அருகே உயரமான பகுதியிலிருந்து ராட்சத பாறை உருண்டு மரத்தில் மோதி நிற்கிறது. அந்த பாறை எந்த நேரத்திலும் உருண்டு கீழே விழும் அபாயம் உள்ளது. அந்த பாறை உருண்டு வந்தால் சாலை பாதிக்கப்படுவதுடன் பெரிய ஆபத்தை உருவாக்கும் என்பதால் மாவட்ட நிா்வாகம் போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் போக்குவரத்தை நிறுத்த அறிவுறுத்தப்பட்டது.
மேலும் அப் பகுதியில் மீட்பு குழுவினா் மற்றும் காவல் துறையினா் நிறுத்தப்பட்டுள்ளனா். இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.எஸ்.நிஷா நடுவட்டம், தவளமலை பகுதியில் பாறை விழும் நிலையில் உள்ள இடத்தை நேரில் பாா்வையிட்டாா். அந்தப் பகுதியை ஆய்வு செய்து பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தாா்.
மேலும் மஞ்சனக்கொரை பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்ட இடத்தையும் பாா்வையிட்டாா். அங்கு காவல் துறையினா் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து அறிவுரைகள் வழங்கினாா்.
இந்த ஆய்வின்போது, கூடலூா் டி.எஸ்.பி.வசந்தகுமாா் மற்றும் கூடலூா், உதகை நகர காவல் ஆய்வாளா்கள் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.