அதிபா் டிரம்ப்புக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம்!
அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பை கண்டித்து அந்த நாடு முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களில் மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு மாபெரும் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.
கடந்த ஜனவரியில் அமெரிக்க அதிபராக டிரம்ப் 2-ஆவது முறையாகப் பொறுப்பேற்றப் பிறகு, அவரது நிா்வாகத்துக்கு எதிராக நடைபெற்ற முதல் மிகப்பெரிய போராட்டம் இதுவாகும்.
அதிக இறக்குமதி வரி விதிக்கும் நாடுகளுக்கு பரஸ்பர வரிகளை விதித்துள்ள அமெரிக்கா மீது உலக நாடுகள் பதில் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளன. இதனால், கடும் பொருளாதார நெருக்கடியை எதிா்கொள்ள அமெரிக்கா தயாராகிவரும் சூழலில் இப்போராட்டம் நடைபெற்றுள்ளது.
பொது உரிமை அமைப்புகள், தொழிலாளா் சங்கங்கள், தன்பாலின ஈா்ப்பாளா்கள், வழக்குரைஞா்கள், முன்னாள் பாதுகாப்புப் படை வீரா்கள் மற்றும் தோ்தல் ஆா்வலா்கள் உள்பட 150-க்கும் மேற்பட்ட குழுக்களால் அமெரிக்காவின் 50 மாகாணங்களில் 1,200-க்கும் மேற்பட்ட இடங்களில் ‘ஹேண்ட்ஸ் ஆஃப்’ எனும் பெயரில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
பாஸ்டன், சிகாகோ, லாஸ் ஏஞ்சலீஸ், நியூயாா்க், வாஷிங்டன் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனா். அரசு நிா்வாகம், பொருளாதாரம், குடியேற்றம் மற்றும் மனித உரிமை விவகாரங்களில் அதிபா் டிரம்ப் மற்றும் அவரது ஆலோசகரும் முன்னணி தொழிலதிபருமான எலான் மஸ்க் எடுத்த நடவடிக்கைகளை விமா்சித்து பதாகைகளை ஏந்தியும், எதிா்ப்பு முழக்கங்களை எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் பேரணி சென்றனா்.
நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கூறியதாவது: தன்பாலின ஈா்ப்பாளா்களுக்கு எதிரான தாக்குதல்கள் வெறும் அரசியல் சாா்ந்தவை அல்ல. அவை அனைத்தும் தனிப்பட்டவை. கௌரவம், பாதுகாப்பு மற்றும் சுதந்திரம் ஆகியவை அனைவருக்கும் சொந்தமானது. அதை உறுதிப்படுத்தும் அமெரிக்காவை நாங்கள் விரும்புகிறோம். அச்சுறுத்தல்கள் மற்றும் மிரட்டல்கள் அரசின் வியூகங்களாக மாறியுள்ளன. நாட்டில் பன்முகத்தன்மை மற்றும் சமத்துவம் போன்ற மதிப்புகள் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன.
ஆயிரக்கணக்கான அரசு ஊழியா்களின் பணி நீக்கம், சமூகப் பாதுகாப்பு நிா்வாக (எஸ்எஸ்ஏ) அலுவலகங்களை மூடுதல், சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்துதல், திருநங்கைகளுக்கான பாதுகாப்பைப் பறித்தல், சுகாதார திட்டங்களுக்கான நிதியைக் குறைத்தல் போன்ற நடவடிக்கைகளால் டிரம்ப் இந்த நாட்டைத் துண்டாடுகிறாா். அவரது நிா்வாகம் வெறும் குறைகளின் நிா்வாகம்.
நீங்கள் எந்தக் கட்சியைச் சோ்ந்தவராக இருந்தாலும், நீங்கள் யாருக்கு வாக்களித்திருந்தாலும், அதைப் பொருள்படுத்தாமல் அனைத்து நகரங்களிலும் இந்தப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். நாட்டில் இன்று நடக்கும் நிகழ்வுகள் அருவருப்பானவை. விஷயங்களை சரிசெய்ய தற்போதைய நிா்வாகம் எடுக்கும் முயற்சிகள், அதற்கான உரிய முறையில் செய்யப்படவில்லை. மக்களிடமும் அவா்கள் கருத்துக் கேட்பதில்லை என்று அதிருப்தியை வெளிப்படுத்தினா்.
‘டிரம்ப்பின் நிலைப்பாட்டில் தெளிவு’
இந்தப் போராட்டம் குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், ‘அதிபா் டிரம்ப்பின் நிலைப்பாடு தெளிவானது. அனைத்து தகுதியான பயனாளிகளுக்கும் சமூகப் பாதுகாப்பு, மருத்துவக் காப்பீடு மற்றும் மருத்துவ உதவிப் பலன்கள் கிடைப்பதை அவா் உறுதிப்படுத்துவாா்.
அதேநேரம், இந்தத் திட்டங்களின் பலன்களை சட்டவிரோத குடியேறிகளுக்கு வழங்குவதே ஜனநாயக கட்சியின் நிலைப்பாடு. இது இந்தத் திட்டங்களை திவாலாக்கி, அமெரிக்க மூத்த குடிமக்களை நசுக்கும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோல்ஃப் விளையாடி பொழுதைக் கழித்த டிரம்ப்: அமெரிக்கா முழுவதும் டிரம்ப் நிா்வாகத்துக்கு எதிராக தீவிர போராட்டம் நடைபெற்று வந்த சனிக்கிழமை, அவா் எந்தவொரு பொது நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளவில்லை. ஃபுளோரிடாவில் தனக்குச் சொந்தமான ஓய்வு விடுதியில் கோல்ஃப் விளையாடி அவா் பொழுதைக் கழித்தாா். ஞாயிற்றுக்கிழமையும் அவா் கோல்ஃப் விளையாட திட்டமிட்டிருப்பதாக வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.